Wednesday, November 28, 2012

Oviya ithazkaL-2


Fri, 29 Oct 2004 
சபைக்கு வந்தனம்,
நாம் இந்த ஓவிய சஞ்சிகைகளை காலரீதியாகப் பார்க்கலாம்.
    01) The Studio - from London
இது ஒரு மாத இதழ். 1893இல் தொடங்கப்பட்டது. ஒரு பிரதியின் விலை 2ஷில்லிங் 6 பென்ஸ். தோராயமாக 30 பக்கங்கள் கொண்டது. ஓவியங்கள் வண்ணங்களிலும் கருப்பு வெள்ளை என்பதாகவும் இருந்தபோதிலும் வண்ண ஓவியங்கள் எண்ணிக்கையில் குறைவாகத்தான் இருந்தன. சென்னை
ஓவியக் கல்லூரியில் படித்த நாட்களில் எங்களில் சிலர் அடிக்கடி கல்லூரிக்கு அருகில் இயங்கிவந்த மூர் அங்காடிக்கு (அது இப்போது இல்லை என்பது பெரும் சோகம்) சென்று பழைய புத்தகக் கடைகளில் ஓவியம் தொடர்பான புத்தகங்களைத் தேடுவோம். அப்படித் தேடிச் சேர்த்ததில் என்னிடம் எஞ்சியது (இவற்றை பொதுவாக ஒரு குழுவாக அமைத்து எல்லோரும் படிப்போம்) October 1948, November-48 and March 1949, April -49, May-49, June-49, july-49  இதழ்கள் மட்டுமே.
    02) Art News - from New York/ Founded in 1902
ஆண்டில் செப்டம்பர் முதல் மே வரை மாத இதழாகவும் ஜூன்,ஜூலை,ஆகஸ்ட் மும்மாத (QUARTERLY)  இதழாகவும் வெளிவந்தது. மாத இதழ் பிரதி ஒன்று $1.25/- என்றும் மும் மாத இதழ் ( ARTnews Annual, issued quarterly) பிரதி ஒன்று $5/- என்றும் அதன் முதல் பக்கத்தில் சொல்கிறது. இது அளவில் பெரியதாகவும் தோராயமாக 70 பக்கங்கள் கொண்டதாகவும் வெளிவந்தது. என்னிடம் எஞ்சியவை இரண்டு இதழ்கள் மட்டுமே. 1. volume-60/Number-8/December 1961; 2. volume 61/Number-2/April1962. sixty-first issue of continuous publication என்ற குறிப்புடன் தொடங்குகிறது முதல் பக்கம். இந்த மாதம்/ இனி வரஇருப்பவை/ ஆசிரியர் குழு பற்றின விவரம்/கட்டுரைகள்/முக்கிய ஓவியங்கள்/மற்ற பகுதி ( Departments) / மேலட்டை(cover) விவரம்  என்பதாக நமக்கு ஒரு கோடிகாட்டிவிடுகிறது. பல ஓவியம் சார்ந்த விளம்பரங்கள் நிறைந்து இருக்கின்றன.
  
    03) ARTRENDS
சென்னையிலிருந்து 1962/April  மாதம் ARTRENDS A Contemporary art bulletin என்னும் குறிப்போடு ஆங்கிலத்தில் ஒரு இதழ் தொடங்கப்பட்டது. இதில் edited and published by p.v.janakiraman for PROGRESSIVE PAINTER'S ASSOCIATION, at 22, 1st cross, trustpuram, madras-24 (இது தனபால் அவர்களின் இல்ல விலாசம்) என்ற ஆசிரியர் பற்றிய குறிப்பு இருந்தபோதிலும் உண்மையில் இதன் பின்புலத்தில் இருந்தது அப்போது கல்லூரியின் முதல்வராக இருந்த k.c.s. பணிக்கர்தான். ஒரு பிரதியின் விலை ஒரு ரூபாய். வெறும் 8 பக்கங்கள்தான். (a news paper folded into four sheets) வழவழவென்ற தாளில் கருப்பு/வெள்ளை ஓவியங்கள், சிற்பங்களின் புகைப்படங்களை வெளியிட்டு கட்டுரைகளையும் கொண்டிருந்தது. பெட்டிச் செய்திகளாக இலக்கிய ஓவியர்களின் படைப்புக்கள் இருந்தன. வருடத்துக்கு நான்கு இதழ்கள் வந்தன. சில ஆண்டுகள் சென்றபின் அதன் ஆசிரியர் பொறுப்பு K.V.ஹரிதாஸன் என்று காணப்படுகிறது. ஹரிதாஸன் ஓவியர். தாந்திரிக அமைப்புக்களை தனது ஓவிய கருப்பொருளாக அமைத்துக்கொண்டு இயங்கி வருபவர். சோழமண்டலம் ஓவியர் கிராமத்தில் அங்கத்தினர்.  பிந்திய இதழ்களில் இது ஓவிய கிராமத்தைக் களமாகக் கொண்டு இயங்கியது. The Foremost Contemporary Indian Art Journal  என்னும் குறிப்போடு சிறிது புஷ்டியாக சில விளம்பரங்களையும் கொண்டு வந்தது. அதன் விலை ரூ.5/- ஆக உயர்த்தப்பட்டது.இருபது ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து வந்தது.

   

04) “Lalit Kala" and "Lalit Kala Contemporary”

தலை நகரில் இயங்கி   வரும் "Lalit Kala Akademi" தனது பதிப்பகத்தில் பல ஓவிய நூல்களை வெளியிட்டு வருகிறது. "Lalit Kala” "Lalit Kala Contemporary" என்று இரண்டு இதழ்களையும் தொடர்ந்து கொண்டுவருகிறது.
“Lalit Kala”  (A Journel Of Oriental Art Chiefly Indian என்ற குறிப்பு கொண்டது) வின் கௌரவ முதன்மை ஆசிரியர் Karl Kandalavala உதவி ஆசிரியர் Usha Batyia. இது எப்போது வேண்டுமானாலும் வந்தது. விலையும் இதழுக்கு இதழ் மாறியது; சந்தா தொகை நிர்ணயிக்கப்படவில்லை. இதுபற்றி  ‘தொடர்ந்து வரும் விலையேற்றம் காரண மாக இதன் சந்தா தொகையை முடிவு செய்ய இயலவில்லை. எனவே ஒவ்வொரு இதழும் அப்போதைய நிலைக்கு ஏற்றபடியான விலையை கொண்டிருக்கும். முன்கூட்டியே அறிய விரும்புவோர் ஆசிரியருக்கு கடிதம் எழுதித் தெரிந்து கொள்ளலாம்' (owing to high and constantly varying costs it has not been possible to fix any subscription rate. Each issue will be priced individually. Readers desiring to be intimated about the publication and price of future issues should address their enquiries to: The Secretary, lalit kala akademi, Rabindra Bhavan, New Delhi,India) என்று ஆசிரியர் குறிப்பு தெரிவிக்கிறது. என்னிடம் இருக்கும் 23ஆவது இதழின் விலை ரூ.95/- இன்னொரு இதழின் விலை ரூ.250/- முழுவதும் ஆங்கிலத்திலேயே வருகிறது. 18"நீளமும் 12" அகலமும் உள்ள இது 100 பக்கங்களுக்கு பக்கம் வண்ண, கருப்பு/வெள்ளை புகைப்படங்களுடன் கட்டுரைகள், விவாதங்கள், புதிய நூல் விமர்சனங்கள் என்று அடர்த்தியான வகையிலே இருக்கிறது.
Lalit kala Contemporary
 சமகால ஓவிய/சிற்பங்கள் பற்றி பேசும் இந்த இதழ் ஆண்டுக்கு இருமுறை (மார்ச்-டிசம்பர்) என்று நிர்ணயித்துக் கொண்டு பிரதி ஒன்று ரூ.100/- என்று கடந்த 24 வருடங்களாகத் தொடர்ந்து வருகிறது. ஆங்கிலம்தான் இங்கும். 12"நீளம் 10" அகலம் கொண்டது இது. 64 பக்கங்கள் என்று நிர்ணயித்துக் கொண்டு இருப்பதுபோல் தெரிகிறது. இதிலும் கட்டுரை, ஆய்வுகள், விவாதங்கள், இளைய கலைஞர் பற்றின குறிப்புகள் புத்தக விமர்சனங்கள் புகைப்படங்கள் என்று தரமான புத்தகமாக உள்ளது.
   


    05)நுண்கலை

ஆண்டிற்கு இருமுறை (ஜனவரி-ஜூலை) என்று சென்னை ஓவிய நுண்கலைக் குழு கொணரும் கலை இதழ். ஆங்கிலம் தமிழ் இரண்டும் ஒரே இதழில் காணப்படுவது இதன் நூதனம். (நுண்kalai என்று இருமொழியும் கலந்த எழுத்துறு இதழின் முதல் அட்டையில் காணப்படுகிறது) 1982 இல் தொடங்கப்பட்ட இது நடுவில் சில ஆண்டுகள் குறித்த காலத்தில் வராமலும் முற்றுமாக நிறுத்தப் பட்டும்கூட இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக மறுபடியும் வெளிவந்துகொண்டிருக்கிறது.
NUN-KALAI is a bi-annual magazine devoted to the art forms of India with special referenceto the arts and crafts of Tamilnadu. One issue every year is devoted to contemporary Art and the other to Traditional Art.Annual Subscription-Rs.10/- Single copy price-Rs.5/- editor( tamil) N.Muthuswamy  என்று volume-2/No.2- July December1983  இதழில் பொருளடக்கத்தின் கீழே காணப்படுகிறது. ஆனால் அடுத்த இதழிலேயே ஆசிரியர் பற்றின குறிப்பு இல்லை. நீண்ட ஆண்டுகள் குழுவின் செயலாளர் பொறுப்பில் இருந்த திரு பாலசுப்ரமணியம் தான் இப்பணியைச் செய்துவந்தார். 1998ஆம் ஆண்டு முதல் எழுத்தாளர் "இந்திரன்" ஆசிரியர் பொறுப்பில் நுண்கலை வந்து கொண்டிருக்கிறது. இப்போது  ஒரு பிரதியின் விலை ரூ.25/-

    06) The ART news magazine of India

மும்பயிலிருந்து 1996 முதல் வெளிவரும் இந்த மும்மாத இதழ் இது.  ஒவ்வொரு இதழும் ஒரு புத்தகம்போல 100 பக்கங்கள் கொண்டதாகவும் ஏராளமான வண்ண ஓவியங்களின் புகைப்படங்களுடனும் பல நடப்பு விவரங்கள், ஆய்வுக் கட்டுரைகள் என்று ஏக அமர்க்களமான இதழ். இதன் விலை பிரதி ஒன்றுக்கு ரூ.85/- ஜின்டால் என்னும் பெரும் நிறுவனத்தின் பொறுப்பில் கிரீஷ் ஷிண்டே என்பவரை ஆசிரியராகக் கொண்டு மிகவும் நவீன வடிவமைப்புடன் வருகிறது.
இதன் website is at : பொதுவாக இந்தியாவில் நிகழும் காட்சிகள் நிகழ்ச்சிகள் பற்றின நுணுக்கமான விவரங்களும் இதில் இடம் பெறுகின்றன.

Oviya ithazkaLArticle-1


This article appeared in 'maraththadi' net group on Sun, 24 Oct 2004 
சபையோருக்கு வந்தனம்,
‘மரத்தடி'யின் அங்கத்தினனாக ஆனபிறகு நான் அதிகமாக எதிலும் ஓவியம் பற்றி பேசவில்லை. ஓவியம் / சிற்பம் பற்றிய சஞ்சிகைகள் நம்மிடம் இல்லை. இது தொடர்பாக என் மனதில் தோன்றிய சில எண்ணங்களை இங்கு உங்கள் முன் வைக்கிறேன். ஒரு விவாதமோ அல்லது மேல் விவரங்களோ வரக்கூடும் என்று எதிர்பார்த்து.
ஓவியம் / சிற்பம் தொடர்பான புத்தகங்கள் தமிழில் காணக் கிடைப்பதில்லை என்பது பொதுவாக உள்ள மனக்குறை. மற்ற மொழிகளில் குறிப்பாக ஆங்கிலம், ப்ரெஞ்ச், ஜெர்மன் போன்ற பல மொழிகளில் இவை ஏராளமாக பதிப்பிக்கப் படுகின்றன. மிக நேர்த்தியான, தரம்மிகுந்த, விரிவான அலசல் அணுகு முறையுடன், சிறந்த ஓவியங்களின் மூலப் பிரதியின் வண்ணங்கள் மாறாமல் இவை கிடைக்கின்றன.
தமிழுக்கு இது சாத்தியமில்லை என்பது அனைவருக்கும் தெரியுமென்றாலும் இங்கு திரும்பவும் சொல்வதில் தவறேதுமில்லை. இவ்வகைப் புத்தகங்கள் பதிப்பிட செலவு பிடிக்கும். அவற்றுக்கு விற்கும் வாய்ப்பு குறைவு. அதன் விலை மிகவும் அதிகமாக இருக்கவேண்டிவரும். எந்தப் பதிப்பாளரும் நஷ்டப்பட விரும்பமாட்டார். (ஓவிய நண்பர் ஆதிமூலம் தமது கைப்பணத்தை போட்டு -இரண்டு லக்ஷத்துக்குப் பக்கம் என்று கேள்வி- தமதி கோட்டோவியங்களை புத்தகவடிவில் கொணர்ந்தார். அவற்றில் பெரும்பாலான பிரதிகள் தம்மிடமே இருப்பதாக ஒரு முறை சொன்னார்) ஓவியங்களற்ற வெறும் எழுத்து வடிவத்தில் ஓவியம் பற்றி என்ன சொன்னாலும் முழுமையாகது அல்லவா? ஆனால் ஹிந்தி இந்திய அரசின் அரசு மொழியாக இருப்பதால்  ஓவியம் பற்றின நூல்களை அரசாங்கமே சாஹித்ய அகாடமி, லலித கலா அகாடமி போன்ற அமைப்புகளின் மூலம் பதிப்பிக்கின்றது. இதனால் வட இந்தியாவில் சென்ற 10 நூற்றாண்டுகாலமாக புழக்கத்தில் இருந்த, அரசர்களால் போஷிக்கப்பட்ட கையடக்க ஓவியங்கள் (miniature paintings) புத்தகவடிவில் காணக் கிடைக்கின்றன. அவை ஹிந்தி, ஆங்கிலம் இரு மொழிகளிலும் அச்சடிக்கப்படுகின்றன.
தேனுகா தமிழில் சில மேலை நாட்டு ஓவியர்களைப் பற்றி புத்தகங்கள் கொண்டுவந்தார். அதற்கு வாசகரிடமிருந்து என்ன எதிர்வினை வந்தது என்பது தெரியவில்லை. தமிழில் ஓவியம் பற்றி எழுதும் மொழி எல்லோருக்கும் பரிச்சியமானதாக இருக்கமுடிவதில்லை. பெருவாரியான ஓவியம் தொடர்பான சொற்கள்  மேலை நாட்டில் பயன்படுத்தியவிதமாகவே இங்கும் பின்பற்றப் படுகின்றன. குறிப்பாக நவீன சிந்தனை எல்லாக் கலை இலக்கியங்களிலும் மேலை நாட்டு தாக்கம் கொண்டதாகவே நம் நாட்டில் இருந்துவருகிறது. terminology  என்று விளிக்கப்படும் வேற்றுமொழி கலைச் சொற்களுக்கு தமிழில் உரிய சொல்லைத் தேர்ந்தெடுக்க முடிவதில்லை.
ஓவியம்/சிற்பம் தொடர்பான இதழ்களும் மேலை நாடுகளில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. சமகால நிகழ்வுகள் திரிபுகள் முன்னேற்றங்கள் கலைஞர்களின் தன் நிலை விளக்கங்கள் விவாதங்கள் நமக்கு இவற்றின் மூலம் தெரியக் கிடைக்கின்றன.
இந்தியாவில் எழுத்தாளர் முல்க்ராஜ் ஆனந்த் ‘மார்க்' ‘marg' என்னும் பெயரில் மூன்று மாதங்களுக்கு ஒரு இதழ் என்றவகையில் ஐம்பதுகளிலேயே கலை இதழ் கொண்டுவந்தார். மொழி ஆங்கிலம். சென்னையில் k.c.s. பணிக்கரின் மேற்பார்வையில் ‘ஆர்ட் ட்ரெண்ட்” ‘Artrend'  என்னும் இதழ் ஆங்கில மொழியில் மூன்று மாதங்களுக்கு ஒன்று என்பதாக சில ஆண்டுகள் வந்து ஓரளவு இக்குறையை தீர்த்தது. தற்சமயம் “ ஆர்ட் இன்பெர்மெஷன்” ‘Art infermation"  என்று ஒரு ஆங்கில இதழ் (இதுவும் மூன்று மாத இதழ்தான்) மும்பையிலிருந்து வந்துகொண்டிருக்கிறது.
மற்ற இந்திய மொழிகளில் எப்படியோ தெரியவில்லை, தமிழில் ‘தமிழ்நாடு ஓவியம் நுண்கலை' அமைப்பு (State lalit kala akademi) ஆங்கிலத்திலும் தமிழிலுமாக ஆறு மாதத்திற்கு ஒரு இதழ் கொணர்ந்து கொண்டிருக்கிறது. இதுவும் குறிப்பிட்ட இடைவெளியில் வருவதில்லை. கடந்த சில ஆண்டுகளாக ஓவியம்/சிற்பம் திரனாய்வாளர், கவிஞர் இந்திரன் இதன் ஆசிரியராக உள்ளார். இவை பற்றி சிறிது விரிவாக எனது எண்ணங்களையும் மதிப்பீடுகளையும் உங்களுடன் பகிர விரும்புகிறேன். மீண்டும் வந்தனம் சொல்லி, அரவக்கோன்

rukmiNidevi-part-2


Thu, 9 Oct 2003
மஹா ஜனங்களுக்கு வந்தனம்,
எனது பள்ளிப் படிப்பு முடிந்து வீட்டில் அனைவரும் வேண்டாம் என்றபோதும்
பிடிவாதமாக ஓவியப் பள்ளியில் போய் சேர்ந்தேன். ஓவியர் ஸ்ரீநிவாசுலுவிடம்
அதற்காக உரிய பயிற்சி எடுத்துக்கொண்டேன். அவர்தான் என் தந்தையிடம்
சொல்லி இதற்கு உடன்படவைத்தார். பின் நாளில் நான் படித்த பெசன்ட் பள்ளியிலேயே என் ஆசிரியர் ஸ்ரீநிவாசுலுவின் இடத்தில் எனக்கு வேலை கிடைத்தது. என் ஆசிரியர்கள் பலருடன் நானும் வேலை செய்தது ஒரு நூதனமான அனுபவம். ருக்மிணி தேவி நவீன ஓவியத்தை ஒப்புக்கொண்டது இல்லை. என்னை வேலைக்கு எடுத்துக் கொண்ட சமயம் சொன்னார், "நாகராஜன் நீ ஸ்ரீநிவாசுலுவின் சீடன் என்றுதான் உனக்கு இந்த வேலை கொடுக்கிறேன். உன் நவீன ஓவியத்தை நான் வெறுக்க வில்லை. ஆனால், எனக்கு அது வேண்டாம். ஸ்ரீநிவாசுலுவின் இடத்தை நீ நிரப்ப வேண்டும்” அதற்குப் பழுதில்லாமல் நான்அங்கு ஏழு ஆண்டுகள் பணி செய்தேன். அவர் அவ்வப் போது பள்ளிக்கு வருகை தருவார். காலை இறை வணக்கக் கூட்டத்தில் கலந்து கொள்வார். ஓவியக் கூடத்துக்கும் வருவார். மாணாக்கர்களின் ஓவியங்களை ஆர்வத்துடன் பார்வையிடுவார். என் நவீன ஓவியங்களை பற்றி ஏதும் சொல்ல மாட்டார். அவைகளை படைக்க எனக்கு முழு சுதந்திரம் அளிக்கப் பட்டிருந்தது.
ஒரு சமயம் நான் ராஜஸ்தான் பாணி ஓவியம் ஒன்றை பெரிதுபடுத்தி (8க்கு 5ந்து அடிகள்) எண்ணெய் வண்ணத்தில் தீட்டிக் கொண்டிருந்தேன். அது முடியும் தருவாயில் அவர் அதைக் காண நேர்ந்தது. "இந்த ஓவியம் யாருக்குப்போய்
அடையுமோ அவரைக் கண்டு நான் பொறாமைப் படுகிறேன்" என்று சொன்னதை கேட்டு நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. என் திறமையை அவர் ஒப்புக்கொண்டதாகவே பூரித்துப் போனேன்.

    காளிதாசனின் "ஸாகுந்தலம்" அவரால் நாட்டிய நாடகமாக்கப்பட்டது. அது நடனமும் பாத்திரங்கள் வசனம் பேசுவதும் இணைத்து உருவாக்கப்பட்டது. வட மொழியில் அமைந்தது. அதில் வரும் மீனவன் (சகுந்தலையின் மோதிரத்தை விழுங்கிய மீனைப் பிடிப்பவன்) வேடத்தை நான் நடிக்க அவர் தேர்ந்தெடுத்தார். தினமும் பிற்பகல் ஒத்திகைக்குச் செல்வேன். அப்போது அவர் கலைஞர்களை ஒருங்கிணைத்து அவர்களிடம் இருக்கும் திறமையை முழுவதுமாகப் பயன் படுத்தும் திறமையை நேரில் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. திரும்பத் திரும்பச் செய்து பழகி, மெருகு ஏற்றும் வழியை அவர்களுக்கு அவர் பயில் வித்தார். இரண்டாந்தரமான, ஏனோ தானோ என்பது போன்ற படைப்புக்களை அவர் எப்போதுமே ஏற்றுக்கொண்டது இல்லை. அவ்விதக் கலைஞர்களை உரிய தருணத்தில் இழுத்தும் பிடிப்பார். அவர் பேசாமல் இருந்தாலே பெரிய புகழ்ச்சியாக மற்றவர் நினைத்தனர்.  மேடை அமைப்பு, ஒளி அமைப்பு, உடை யலங்காரம், பக்கவாத்தியம், ஒப்பனை என்று சகல துறைகளிலும் முழுமையான முடிவுகள் கொண்டவராக இருந்தார்.
    அரங்கத்தில் பின்புறம் அமையும் திரை தொங்கல் வெகு நேர்த்தியாகவும் ஓவியரின் திறமையை முழுவதும் உள்ளடக்கியதாகவும், இருந்ததில் அவருடைய பங்கு வெகு முக்கியம். ஸ்ரீநிவாசுலுவிடம் முதலில் காட்சியை விளக்கி சிறிய அளவில் ஓவியம் தீட்டச் செய்து ஒரு சரியான வடிவம் கிடைத்தபின் அதைப் பெரிய அளவில் துணியில் தீட்டும் வேலை தொடங்கும். அதில் என் பங்கும் கணிசமாக இருந்தது. தான் நினைத்தவிதத்தில் அவை உருக்கொள்ளும் விதத்தில் பலமுறை வந்து பார்ப்பார்.  மேம்படுத்தல், செழுமைப் படுத்துதல் போன்ற விஷயங்கள் அவ்வப்போது அவரால் பின்பற்றப்படும். கொல்கத்தா, சாந்தினி கேதன் ஆகிய இடங்களில் தமது நடன நிகழ்ச்சிகளை அளிக்க கலாக்ஷேத்திரக் கலைஞர்களுடன் எனக்கும் செல்ல வாய்ப்புக் கிட்டியது. அப்போது அவர் என்னிடம் முறையாக நடனம் பயிலும்படி யோசனை கூறினார். வேலையில் இருந்தபடி பகுதி நேரத்தில் பயில்விக்க வசதி ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் சொன்னார். ஆனால் நான் இசையவில்லை. என்வழி ஓவியம் சார்ந்ததுதான் என்பதில் நான் முடிவாக இருந்தேன்.

    அவருக்குப் பின் கலாக்ஷேத்திரம் அவருடைய பயில்விக்கும் முறை, நாட்டிய நாடகங்கள்,  ஆகியவற்றை ஒரு அருங்காட்சியகம் போல் பேணிக் காத்து வருகிறது. அவர் அமைத்துக் கொடுத்த பாதையில் இன்று பலரும் நாட்டியத் துறையில் மிகப் பிரபலமாக உள்ளனர். ஆனால் அவருடன் அதை உருவாக்கியவர்களில் பலர் இன்று மறைந்துவிட்டனர் அல்லது தம்மை அதிலிருந்து விடுவித்துக் கொண்டுவிட்டனர். எனவே கலாக்ஷேத்திரத்தின் எதிர்காலம் ஒருகேள்விக் குறிதான்.

rukmini devi-part.1


this article was appeared in rayar kappi klub a net group on 
Wed, 8 Oct 2003

    மஹாஜனங்களுக்கு வந்தனம்,

    இது திருமதி ருக்மிணி தேவி அருண்டேல் அவர்களின் நூற்றாண்டு வருடம். அவர் உருவாக்கிய ஸ்தாபனம் "கலாக்ஷேத்திரா”வில் இந்த ஆண்டு முழுவதும் அதைக் கொண்டாடுகின்றனர்; நாட்டிய, இசை நிகழ்ச்சிகள் மூலம். எனக்கு அங்கு கற்கவும் வளரவும் கிடைத்த வாய்ப்பை வாழ்வில் எனக்குக் கிடைத்த பெரும் பேறாக எண்ணி கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.

    வேதகாலத்தில் விவரிக்கப்படும் கல்விக்கூடங்களுக்கு ஒரு இன்றைய சாட்சி "கலா க்ஷேத்திரம்". வடக்கே வங்காளத்தில் "சாந்திநிகேதன்” போல தெற்கே சென்னையில் இது. தாகூரும் ருக்மிணிதேவியும் தனி மனிதராகத் தொடங்கி ஒரு இயக்கமாக வளர்ந்து இந்தியாவின் கலாச்சார அடையாளங்களாய் இருப்பவர்கள்.
    எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது என் தந்தை 'ரிஷிவேலி' (rishi vally school) என்னும் பள்ளியிலிருந்து மாற்றலாகி சென்னை வந்து பெசன்ட் உயர் நிலைப் பள்ளியில் வரலாறு/புவியியல் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார். ருக்மிணிதேவி தமது கலாக்ஷேத்திரத்துடன் இந்தப் பள்ளியையும் அமைத்து நடத்தி வந்தார்.
    சென்னையின் தென் கோடியில் அடையாறு ஆறு கடலில் கலக்கும் நிலப் பகுதியில் அமைந்துள்ள பிரம்ம ஞான சங்கத்தின் [theosophical society] ஒரு பகுதியில் இவை அமைக்கப் பட்டன. பெரிய வனம்போலக் காணப்பட்ட இந்த இடம் ஒரு பர்ணசாலையை ஒத்திருந்தது. தேவதாசிகள் என்று குறிப்பிடப் பட்டவர்களால் காப்பாற்றி போஷிக்கப்பட்டு பொதுமக்கள் மத்தியில் நிஷிதமாகப் பார்க்கப்பட்ட சதிர் என்று அழைக்கப்பட்ட நாட்டியக் கலையை   இன்று பொது உடமையாக்கிய ருக்மிணி தேவி, தாம் அதை தமது 29வது வயதில்தான் கற்றார். மிகுந்த எதிர்ப்புக்கிடையே முதன் முதலில் பிரம்ம ஞான சங்கத்தின் வருடாந்திர சந்திப்பில் மேடை ஏறினார்.
    எனக்கும் இசை, நாட்டியம், ஓவியம் போன்றவை அறிமுகமானது இங்குதான். 'கலாக்ஷேத்திரம்' தென்னாட்டுக் கலைகளை (கர்நாடக இசை, பரத நாட்டியம்{"சதிர்” என்னும் அமைப்பிலிருந்து புனரமைக்கப் பட்டது.}கத களி ) பேணிப் பரப்பும் ஸ்தாபனமாக விளங்கியது. ஓவியத்துக்கும் இடம் இருந்தது. என்றாலும் பரத நாட்டியம்தான் முதன்மையான கலையாக பயில்விக்கப் பட்டது. பள்ளியில் ஓவிய வகுப்புக்கள் மாணவர்களுக்கு தங்கள் கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் இடம் அளிக்கும் விதத்தில் அமைந்திருந்தது. அங்கு திரு ஸ்ரீநிவாசுலுதான் ஓவியர். என் குருவும் கூட.

    ருக்மிணி தேவி பற்றி இங்கு நான் சொல்ல விழைவது  ஒரு சிறுவனாக, இளைஞனாக என் பார்வையில் அவர் காணக் கிடைத்தது பற்றித்தான். கலாக்ஷேத்திரா அமைந்த பகுதியை வசந்த சாலையிலிருந்து தாமோதர புரம், வண்ணான் துறை வழியாக திருவான்மியூர் செல்லும் சாலை பிரித்தது. ( இது தெற்கு வடக்காக அமைந்தது.)  மேற்குப்பகுதி பள்ளிக்கும், கிழக்குப்பகுதி கலைப் பள்ளிக்குமாக இருந்தது. அனேகமாக எல்லா கற்பிக்கும் கூடங்களும் தென்னம்கூரை குடில்கள்தான். மூன்றடிச் சுவர் எழுப்பி, மூங்கில் பிளாச்சுகளால் தடுக்கப்பட்டவை. சிமென்ட் தரை.  அங்கு கண்ணாடிக் கொட்டகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கு பெரிய (சுமாராக பத்தடி அகலம் ஆறடி உயரம் இருக்கும்) கண்ணாடி இருக்கும். தமது நடனப் பயிற்சியை அங்குதான் அவர் செய்வார். தமது உருவத்தை கண்ணாடியில் பார்த்தபடி பயிற்சி செய்து அதில் மெருகு கூட்டுவார். நாங்கள் ஜன்னல் வழியாக எட்டி வேடிக்கை பார்ப்போம்.
(இப்படித்தான் என் தங்கை கிருஷ்ணவேணி பார்த்து அதைப்போல ஆடக் கண்டு
அவளுக்கு நாட்டியம் பயில்விக்க என் தந்தையிடம் சம்மதம் பெற்று அவளை
சிறந்த நாட்டியக் கலைஞராக்கியது வேறு கதை.)

    எப்போதும் அவரை பிறர் ஒரு பயம் கலந்த மரியாதையுடனேயே அணுகுவர். செயலில் சுத்தம், உன்னதம், முழு கவனம் இவற்றை எல்லோரிடமும் எதிர்பார்ப்பார், அவை இல்லாதபோது சுட்டிக்காட்டவும் தயங்கமாட்டார். இசை, நாட்டியத் துறையில் அப்போது மிகப் பிரபலமானவர்கள் (பாபநாசம் சிவன், டைகர் வரதாச்சாரியார், மைசூர் வாசுதேவாச்சார், மைலாப்பூர் கௌரிஅம்மாள், சந்துப் பணிக்கர் அவர்களில் சிலர்) பல ஆண்டுகள் வந்து தங்கி பல நாட்டிய நாடகங்களுக்கு மெட்டு அமைத்தும், நடனம் பயில்விப்பதில் உதவியும் செய்தனர்.
( வளரும்)