Monday, December 21, 2015

‘தேனுகா’ இல்லாத குடந்தை



எனக்கு ‘தேனுகா’ என்ற ஸ்ரீநிவாசனுடன் முதல் சந்திப்பு நிகழ்ந்தது, 1985 ல் கும்பகோணத்தில்தான். அது, குடும்பத்துடன் (‘கிருஷாங்கினி’, நான் மகன், மகள்) தமிழ்நாட்டு ஊர்களுக்குச் சுற்றுலா சென்ற சமயம்.  புதுச்சேரியில் யூகோ வங்கியில் பணி புரிந்த காலம். கட்டாயம் சந்திக்க வேண்டியவர் களின் பட்டியலில் ‘தேனுகா’ பெயரும் இருந்தது. ‘கரிச்சான் குஞ்சு’வின் மகள் விஜயாள் பணிமாற்றம் பெற்று பாண்டிச்சேரியிலிருந்து கும்ப கோணம் சென்று ஒரு வருடம் ஆகியிருக்கும்.
நாங்கள் குடந்தையில் இருந்த இரு நாட்களிலும் ‘தேனுகா’ பெரும்பாலும் எங்களுடன் இருந்து உரையாடினார். முதல் முறையாக சந்திக்கும் உணர்வே தோன்றாமல் வெகு இயல்பாக உரையாடினார். ‘கிருஷங்கினி’யின் சிறு கதைகளைப் பற்றி விரிவாகப் பேசினார். தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
அடுத்த ஆண்டே (1986 ஜனவரி) எனக்குப் பதவி உயர்வு கிட்டியது. கும்ப கோணம் தஞ்சாவூருக்கு இடையில் இருந்த பண்டாரவாடை கிளையில் (யூகோ வங்கியில் தலைமைக் காசாளர் பொறுப்பு) பணி. அங்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டு நாங்கள் பாட்ராச்சாரி தெருவில் வசிக்கத் தொடங்கினோம். குடந்தையில் வசித்த அடுத்த ஐந்து ஆண்டுகாலம் அனேகமாக தினமும் ‘தேனுகா’வுடனான சந்திப்பு இருந்தது. அது அவரது அலுவலமாக, எங்கள் வீடாக, காந்தி பூங்காவாக, கோபால்ராவ் நூலகமாக, கும்பேஸ்வரர் கோவில்  ராமசாமி கோவில் சாரங்கபாணி கோவில் என ஏதாவது ஒரு ஆலயமாக இருக்கும். அவர் எப்போதும் ஒரு மிதிவண்டியில் பயணிப்பார். சமயத்தில்  அவருடன் தஞ்சை பிரகாஷ் உள்ளிட்ட முக்கிய நட்புகள் கூட்டம் எங்கள் இல்லத்துக்கு வரும். உரையாடல் வானத்தின் கீழ் உள்ள அனைத்தையும் தொட்டு வரும். சர்ச்சைகளும், பொறிபறக்கும் எதிர் வாதங்களுமாக கூரை அதிரும். பண்டாரவாடை வெற்றிலை அதற்குக் காரம் கூட்டும்.
ஓவியப் பள்ளிக்கு நாங்கள் இருவரும் மிதிவண்டியுடன் எண்ணற்ற முறை சென்றிருக்கிறோம். P.B..சுரேந்திரநாத், S..முருகேசன் என்று முதல்வர்கள் அடுத்தடுத்து இருந்த சமயம் அது. வழியில்தான் சிற்பி வித்யாஷங்கரின் இல்லம். அவரது இல்லத்துள்ளும் நேரம் போகும். பல ஞாயிறுகளின் போது, நாங்கள் குடும்பத்துடன் சுற்றியுள்ள ஆலயங்களுக்கு மதிய உணவுடன் புறப்படுவோம். ‘தேனுகா’வும் உடன் பயணிப்பார். அவை பற்றிய வரலாறு, கலை சார்ந்த நுணுக்களுடன் ஓயாமல் பேசியபடியே நேரம் செல்லும். அவருக்கு அதெல்லாம் ஒரு தாய்வீடு போலத்தான். குறிப்பாக கங்கை கொண்ட சோழபுரம் ஆலயம், தாரசுரம் ஆலயம் சென்ற அனுபவம் இன்றும் மறக்க முடியாதது.
மாலை வங்கி வேலை முடிந்தவுடன் மற்றவர் போலத் தன் வீடு போக மாட்டார் ‘தேனுகா’. டபீர் தெருவில் உள்ள ‘கரிச்சான் குஞ்சு’ வீட்டுக்குப் போய், அவரை அழைத்துக் கொண்டு நகரின் நடுவில் இருக்கும் காந்தி பூங்காவிற்கு வண்டியை உருட்டியபடி வருவார். அரசலாற்றின் அருகில் வசித்த எம்.வி. வெங்கட்ராமன் தமது மிதிவண்டியில் வந்து சேர்ந்து கொள்வார். அவர் கும்பேஸ்வரன் கோவில் மொட்டை கோபுரத்திற்கு எதிர்ப்புறம் இருந்த பசும்பால் காபி கிளப்பில் சிற்றுண்டி முடித்துக் கொண்டுதான் வருவார். வெற்றிலை சீவல் மெல்லாத நேரமே இராது. அந்தநேரத்தில் இலக்கிய ஆர்வம் கொண்ட பல இளைஞர் குழுமுவது தப்பாது. இருட்டத் தொடங்கியதும் எல்லோரும் கலைந்தபின் . ‘தேனுகா’, ‘கரிச்சான் குஞ்சு’வைத் திரும்ப கூட்டிச் சென்று அவரது வீட்டில் சேர்த்தபின்தான் தன் வீடு செல்வார்.
அவருக்கு நாய் அச்சத்தைக் கொடுக்கும் விலங்கு. எங்கள் வீட்டில் பைரவ் என்னும் நாய் இருந்தது. எங்கள் இல்லத்துக்கு வரும் அவர் வீட்டு வாயிலில் நின்றபடி அதை நாங்கள் சங்கிலியல் சரியாகப் பிணைத்துள்ளோமா என்று கேட்டுக் கொண்டு உறுதி செய்துகொண்டபின் தான் மிதிவண்டியைப் பூட்டுவார். விட்டல்ராவ் தமது குடும்பத்துடன் குடந்தை வந்தபோது அவர்களை தேனுகா எங்கள் இல்லத்திற்குக் கூட்டி வந்தார். அது போலவே குடந்தை வாழ் இசைக் கலைஞர்களையும் அறிமுகம் செய்துவைத்தார். தபால் இலாகாவில் பணியாற்றிய சம்பத் ஐயங்கார் அப்படி அறிமுகம் ஆனவார்தான். அவர் அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் சீடர். குடந்தையில் துக்காம்பாளையத் தெருவில் ஐயங்கார் வசித்த போது அவரது கடைசிக் காலத்தில் அவருடன் இருந்தவர்.

குடந்தை ஓவியக் கல்லூரியில் ஒரு செயல்முறை விளக்க ஓவிய--சிற்ப நிகழ்வு ஏற்பாடு ஆனது. அது பற்றி ஒரு மதிப்பீட்டுக் கட்டுரை எழுதும்படி க்ருஷாங்கினியைக் கேட்டுக் கொண்டார். வற்புறுத்தினார் என்பதுதான் சரியாக இருக்கும். அதற்கு முன்னர் க்ருஷாங்கினி அம்மாதிரி கட்டுரைகள் எழுதியதில்லை எனவே மிகுந்த தயக்கம் காட்டினார்  அதுதான் முதல் கட்டுரை. கிருஷாங்கினிக்கு  ஒவியம் பற்றி எழுத ஊக்கம் அளித்தவர் தேனுகாதான். அது பின்னர் ஓவிய நுண்கலை இதழில் வெளிவந்தது.
தேனுகா அடிக்கடி சென்னை சென்று வருவார். ஒரு முறை அது பற்றிக் கேட்டபோது ‘பேண்ட்’ தைத்துக் கொள்ளப் போனதாகச் சொன்னார். நான் வியப்புடன் குடந்தை, தஞ்சை நகர்களில் தைத்துக் கொள்ள என்ன தடை என்ற போது இங்கே சரியாக அமையாது என்றார். சென்னையில் லஸ் பகுதியில் இயங்கிய ஒரு தையல் கடையில்தான் எப்போதும் தைத்து வாங்கினார்.
 ‘ஜனரஞ்சனி’ என்னும் அமைப்பு மாதந்தோறும் ஏற்பாடு செய்யும் கர்நாடக இசை நிகழ்ச்சிகளுக்கு நாங்கள் தவறாமல் செல்வோம். மறுதினம் அன்று பாடிய இசைக் கலைஞரின் நிறைகுறைகளைப் பற்றிய விரிவான உரையாடல் ஒன்று அவரிடமிருந்து வரும். சுவாமிமலை ராஜரத்தினம் (நடன குரு) அவரது அண்ணன். ‘தேனுகா’ நாதஸ்வர கச்சேரிகளில் தாளம் போடும் தனது அனுபவங்களையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அவரது இசை நுட்பம் எனக்கு விளங்காது. என் இசை அறிவு கேள்வி ஞானம்தான்.
என் ஓவியப் படைப்புக்களைப்பற்றிய கருத்துக்கள் அவ்வப்போது அவரிடமிருந்து வருவது எனக்கு ஊக்கப்படுத்தும் விதமாகவே இருந்தன. அவருக்கு, ஓவியர்கள், சிற்பிகள், எழுத்தாளர்கள் இசைக் கலைஞர்கள் நடனக் கலைஞர்கள் என்று அனைவருடனும் ஆழமான நட்பு இருந்தது. அனைவருடனும் இணக்கமான நட்புடன் பழகி வந்தார் என்பது பல நேரங்களில் அவர் பேச்சில் வெளிப்பட்டது.

அவர் ஓவியம்--சிற்பம் சார்ந்த மதிப்பீடுக் கட்டுரை தொடர்ந்து எழுதினார். கவிதைகளையும் எழுதினார். ஆனால் அவருக்குப் புகழும் பெருமையும் கொடுத்தது அவரது கட்டுரைகள்தான்.
எனக்கு பண்டாரவாடையிலிருந்து பணிமாற்றம் சென்னைக்கு (1990) கிட்டியது. பின்னர் படிப்படியாக குடந்தை தஞ்சை நண்பர்களுடான சந்திப்பு குறைந்து கொண்டு வரத்தொடங்கியது. ‘தேனுகா’ சென்னை வரும் போதெல்லாம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசுவார். ஆனால் அதுவும் மெதுவாகக் குறைந்தது. அவருக்கு இருந்த பணி நெருக்கடிதான் காரணம். அவர் கட்டிய புதிய இல்லத்திற்குப் போக எனக்கு  இயலவில்லை. ஆனால் அந்த வீட்டின் அமைப்புப் பற்றி அவர் மிகுந்த மனநிறைவுடன் பல தடவை  சொல்லிக் கேட்டிருக்கிறேன். தான் ஒரு கவிஞர் என்று அறியப்பட வேண்டும் என்று பெருவிருப்பம் கொண்டிருந்தார் தேனுகா. மேலை நாட்டு ஓவியர்களில் பியட் மோந்திரியன், நவீன ஓவிய உத்தியான ‘நியோபிளாஸ்டிசிசம்’ பற்றி அவர் நீண்ட நுணுக்கமான உரையாடலகள் என்னுடன் நிகழ்த்தியுள்ளார். மேலை நாட்டு நவீனச் சிந்தயை உள்வாங்கிக்கொண்டு அதை நம் மண்ணின் சிந்தனையுடன் இணைத்துப் படைப்பதையே அவர் விரும்பினார். ‘ஆஹிரி’ (அது ஒரு கர்நாடக இசை ராகத்தின் பெயர்) என்னும் தலைப்பிட்ட தனது கவிதை வாசகர்களுக்குச் சரியாகப் புரிதலில் சென்றடையவில்லை என்ற வருத்தமும் அவருக்கு உண்டு. அவ்விதமே தனக்கு ஒரு பெண்குழந்தை வாய்க்கவில்லை என்பதும் அது பற்றின ஆதங்கமும் அவரிடமிருந்து அடிக்கடி வெளிப்படும். இதே மனக்குறை பிரபஞ்சனிடமும் உண்டு.
சென்ற ஆண்டு சிற்பி தனபால் அவர்களுக்கான ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் அவர் சிறப்புரை செய்தார். அது சென்னை பெசன்ட் நகரில் நிகழ்ந்தது. அப்போது சந்தித்ததுதான் கடைசி சந்திப்பு.
‘தேனுகா’ மறைந்த செய்தியை நான் ‘தினமணி’ நாளிதழில் படித்துப் பதறியபடி க்ருஷாங்கினியிடம் சொன்னேன். அப்போதுதான் அவர், கனடாவில் வசிக்கும் எங்கள் மகள் நீரஜா தொலைபேசியில் அந்த செய்தியைச் சொல்லக் கேட்டுக் கொண்டிருந்தார்.
உடனே கும்பகோணம் போக மனம் துடித்தது. முன்பு தஞ்சை ப்ரகாஷ் இறந்த செய்தி கேட்டவுடன் சென்னையிலிருந்து பேருந்தில் பயணப்பட்டு அவரது இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள முடிந்தது. இப்போது அது இயலவில்லை. முதுமைதான் காரணம். மனம் புழுங்குகிறது. ப்ரகாஷ் இல்லாத தஞ்சாவூருடன், ‘தேனுகா’ இல்லாத குடந்தையும் இப்போது சேர்ந்து கொண்டது. Published in “thalam” 2014 last quarter issue

    

என்னை ஆட்கொண்ட இசையும், நானும்




சிறுவயது முதலே இசைச் சூழலில் வளர்ந்த நான் அதைக் கற்கத் தேர்ந்தெடுக்காதது எப்படி என்று பிறரால் வினவப்படும்போது தக்க பதில் தெரியாமல் தவித்ததுண்டு. இளமையில் எப்போதும் கிட்டும் பொருள்கொண்டு விரல்களால் தாளங்களை தோன்றிய விதமாய் தட்டிக்கொண்டிருப்பது எனக்கு உற்சாகமான பொழுதுபோக்கு. வீட்டில் பெரியவர்களுடன் அனைத்து இசை நிகழ்ச்சிகளுக்கும் தவறாது சென்று வருவேன். மாலையில் ஒரு குழுவாகக் கிளம்பி மயிலாப்பூர், லஸ் போன்ற இடங்களில் அவ்வப்போது நிகழும் இசை நிகழ்ச்சிகளுக்கு சென்று இரவில் நடந்தே திரும்புவது என்பது உற்சாகமானதாகவே இருந்தது. அப்போது நாங்கள் அடையாரில் பெசன்ட் பள்ளி வளாகத்தில் வசித்துக்கொண்டு இருந்தோம்.
பெசன்ட் பள்ளியில் இசை வகுப்பு என்பது வாரத்தில் மூன்று நாட்கள் (நாற்பத்து ஐந்து நிமிடம்) பாட அட்டவணையில் (periods) இருக்கும். பத்து (பத்மாசனி) டீச்சர் வகுப்புக்கு வந்து கற்பிப்பார். பலமொழிப் பாடல்களை கரும்பலகையில் எழுதி, உச்சரிப்பை திருத்தி, சுருதியுடன் பாடுவதற்கு சொல்லிக்கொடுப்பார். எனது குரல் உடையும் வரை பாடுவது தொடர்ந்தது.
1970இல் பணி சார்ந்து பாண்டிச்சேரி சென்றபோதும் இசை நிகழ்ச்சிகள் கேட்பது தொடர்ந்தது. ஆனால் அதன் நுணுக்கங்கள் எப்போதுமே எனக்குப் புரிந்தது கிடையாது. பல பாடல்களின் முதல் வரி அல்லது பல்லவி மட்டுமே தெரியும். ராக ஆலாபனையின்போது அதன் பெயர் தெரியாமலேயே அதில் லயிப்பதுண்டு. 1981 இல் நான் ஒரு ரேடியோ வாங்கினேன் அதில் இசையை நாடாவில் பதியும் வசதியும் இருந்தது. அப்போதெல்லாம் வானொலி இதழ் மாதம் இருமுறை வெளிவரும். நிகழ்ச்சிகளின் விவரங்கள் இசைக் கட்டுரைகள், இசைக்குறிப்புகள் போன்றவை அதில் இருக்கும். பாடகர் பாடப்போகும் பாடல்களின் பெயர் அது சார்ந்த மற்ற விவரங்கள் எனக்கு நிகழ்ச்சிகளை கேட்கும்போது மிகவும் உதவியாக இருந்தன. ஒலிநாடாவில் இசையைப் பதிவு செய்வது என்பது அதிகரித்து அதற்கான செலவும் கூடத் தொடங்கியது. வானொலி இசை நிகழ்ச்சிகளை பாதுகாக்கத் தொடங்கியது அப்போது முதல்தான். கும்பகோணம், சென்னை என்று இடம் மாறிய போதும் அது நிற்கவில்லை. ஒலி நாடாக்களின் எண்ணிக்கை 200 யும் தாண்டியது.  குறுந்தகடு வந்தபின் அனைத்து ஒலி நாடக்களின் இசை நிகழ்ச்சிகளும் mp3 உருவத்தில் பதியத் தொடங்கினேன். தொடக்கத்தில் அதற்கு நிறையவே செலவு செய்தேன். பின்னர் ஒரு நண்பரின் உதவியால் நானே அந்த முறையைக் கற்றுக் கொண்டேன்.
இன்று என்னிடம் ஒரு குட்டி இசை வங்கியே உள்ளது. அவற்றின் அனைத்து விவரங்களையும் கணினியில் தட்டச்சு செய்து குறுந்தகட்டில் பாதுகாத்துள்ளேன். இப்போது சுமாராக ஒரு இருபது ராகங்கள் உடனே அடையாளம் தெரியும். Mp3player என்னும் இசைப்பேழை வாங்கியபின் தினசரி காலை நடைபயிற்சி என்பது இசையுடந்தான் நிகழும். இரவில் படுத்து தூங்கும் முன்னரும் இசைப்பேழையில் சங்கீதம் கேட்பது வழக்கமாகி விட்டது. நான் M.D.ராமநாதன், மதுரை சோமு, வோலேட்டி வெங்கடேஸ்வருலு மூவருடைய இசையிலும் என்னை இழப்பதுண்டு.
    கச்சேரிகளில் நாம் காணக்கூடிய சில பொதுவான அம்சங்கள் உண்டு. அது நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர் பற்றியதுதான். சிலர் பையில் புத்தகங்கள், ஒரு நோட் புத்தகம், பேனா சகிதம் வருவார்கள். இவர்கள் பயிலும் மாணவர்கள் அல்ல. எல்லா நிகழ்ச்சிகளிலும் தவறாமல் வித்வான் பாடும் பாடல், அதன் மற்ற விவரங்களைத் தமது நோட்டில் தேதி, நிகழ்ந்த இடம், போன்ற குறிப்புகளுடன் வருடக் கணக்கில் பதிவு செய்து இருப்பார்கள். இன்னும் சிலர் வித்வான் பாடும் போதும் ராக ஆலாபனையில் திளைக்கும்போதும் தாமும் நமக்குப் பக்கத்திலோ பின்புறமோ அமர்ந்து கூடவே மெல்லிய குரலில் பாடி தமது சங்கீத ஞானத்தை உறுதிப்படுத்திக் கொள்வார்கள். சிலர் ராக ஆலாபனை முடியுமட்டும் காத்திருந்து வித்வான் பாடலைத் தொடங்கியவுடன் பையிலிருந்து ஒரு புத்தகத்தை உருவுவார்கள். அது பாடல்களும் அவற்றின் ராகமும் கொண்ட பட்டியல் புத்தகமாயிருக்கும். அதில் அந்தப் பாடலைத் தேடி, ராகம் கண்டுபிடித்து நோட்டில் எழுதுவார்கள். இதற்குள் வித்வான் பாடலில் சரணத்துக்கு வந்து கற்பனை ஸ்வரங்களில் உலாவிக் கொண்டிருப்பார். தமது அருகிலிருப்பவர்களிடம் ராகம் கேட்பவர்களும் உண்டு. எனக்குப் பல ராகங்களின் பரிச்சயம் கிடையாது. ஏதோ ஒரு பத்து பிரதான ராகங்களை கொஞ்சம் சிரமம் இல்லாமல் அடையாளம் தெரிந்து கொள்வேன். யாராவது இம்மாதிரி என்னிடம் ராகத்தின் பெயரைக் கேட்டு சிரமப்படுத்தியதும் உண்டு.
    இன்னும் சிலர் தமது அந்த நாளைய நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்குவர், நடு நிகழ்ச்சியில். அவர்களுக்கு எப்போதும் அன்றையக் கச்சேரியை அந்த நாளையக் கச்சேரி ஒன்றுடன் இணைத்து தமது இசை அறிவை சொல்ல வேண்டும். டி.வி.சங்கரநாரயணன் கச்சேரி ஒன்று முடிந்தவுடன் அவரிடம் வந்து ‘உங்க மாமா மணி ஐயர் பாடி நிறையக் கேட்டிருக்கிறேன். இன்றும் அவர் இசையைக் கேட்பதுபோல் இருந்தது' என்று கூறி அது புகழ்ச்சியா நக்கலா என்று நம்மை குழப்புபவர்களும் உண்டு.
    சில நாட்களுக்கு முன் ஹிந்துவில் (ஆங்கிலம்) புகழ்மிக்க சில நேற்றைய இசைக் கலைஞர்கள் தங்கள் பிறப்புகளை இசையைத் தொழிலாகக் கொள்ள அனுமதிக்கவில்லை என்னும் செய்தியைப்படித்தேன். (ஜி,என்.பி., பாலக்காடு மணிஐயர்) அப்போது எனக்குத் தோன்றியது, சில இசைக் கலைஞர்கள் தங்களது பிள்ளை/பெண்களை கவனமாக மேடையேற்றி இசைத்தொழில் செய்ய வைத்தார்கள். (லால்குடி, எம்.எஸ்.ஜி, என்று பட்டியல் நீளும்) அவர்களுக்கும் அனேக சீடர்கள் உண்டு என்றாலும் மேடையில் தங்களுடன் அவர்களை இசைக்க அனுமதிக்க வில்லை என்பதே செய்தி. ஆங்காங்கே (வாரிசு இல்லாத) தமது சீடர்களை தங்களுடனேயே மேடைதோறும் கூட்டிச்சென்ற இசைமேதைகளும் இருக்கத்தான் செய்தார்கள்..
    கர்நாடக இசை நிகழ்ச்சிகளில் உள்ள கட்டமைப்பிலிருந்து விலகி புதிய உத்திகளைப் புகுத்துவது என்பது பாலமுரளி கிருஷ்ணா, குன்னக்குடி இருவரும் தொடங்கி வைத்தது என்று தோன்றுகிறது. பாலமுரளி நிகழ்ச்சியின் நடுவில் இடைவேளை அறிவித்துக் கேட்போரைப் புருவம் தூக்க வைத்தார். குன்னக்குடி வலையப்பட்டியாருடன் இணைந்து தவிலுக்கு வயலின் வாசித்தார். அவரும் நிகழ்ச்சியை இரண்டாகப் பிரித்துக்கொண்டு பின்பாதியில் மக்கள் விரும்பும் மெல்லிசை, சினிமாப் பாடல்கள் என்று அரங்கை அதிர வைத்தார்.  கனராகங்களைக்கூட கரணம்போட்டு வாசித்து கைதட்டல் பெற்றார். இருவரும் கேட்போருக்குத் தங்கள் மேதமையில் கொஞ்சம்போல் கிள்ளிப் போட்டார்கள். சீர்காழியாரும் நிகழ்ச்சி நிரலில் கனமான இசை, பக்தி இசை முடிவில் சினிமா பாடல்கள் என்று முறைப்படுத்திக் கொண்டார். சோமு நிகழ்ச்சியின் முடிவில் குறிப்பிட்ட தமிழ்ப் பாடல்களை தவறாமல் பாடிக் கேட்கும் கூட்டத்தைக் களியாட்டம் போட வைத்தார். (என்ன கவிபாடினாலும்) அப்புறம் இருக்கவே இருக்கிறது ஜுகல்பந்தி மற்றும் தாள வாத்திய கச்சேரி. திருவாவடுதுறையாரே ஒத்து வாத்தியத்தை ஒதுக்கிவிட்டு ஸ்ருதிப் பெட்டி வைத்துக் கொண்டார். அப்புறம் நாதஸ்வரத்துக்கு வயலின் என்று புதுமைப் பட்டியல் நீளும்.
    நமது உண்ணும் உணவை (தமிழ்நாட்டுப் பழக்கம்) குழம்பு, ரசம், மோர் என்னும் வரிசையில் பரிமாறும் வழக்கம் எப்போது ஏற்பட்டதோ தெரியவில்லை. அதை மாற்றி மோர், ரசம், குழம்பு என்று யாரும் உண்பதில்லை என்றே நம்புகிறேன். இசையும் எனக்கும் என்போன்ற பலருக்கும் அப்படித்தான் வேண்டியிருக்கிறது. வர்ணத்தில் தொடங்கி, வினாயகர்மேல் ஒரு கிருதி என்று தொடரும் கச்சேரியைக் கேட்கும்போது பலமுறை சென்ற பாதையில் போகும் சுகத்தை கொடுக்கிறது. இசை நிகழ்ச்சிகளில் பாடுபவருக்கும் பக்க வாத்தியம் வாசிப்பவருக்கும் ஒரு மன ஒற்றுமை ஏற்பட்டுவிட்டால் அன்று நிகழ்ச்சியைக் கேட்போருக்குப் பெரும் பேறுதான். அது கலைஞர்கள் சமமான திறமையும் புகழும் உள்ளவர்களாக இருந்துவிட்டால் இன்னும் சுகம்.
    அடுத்தது பக்க வாத்தியங்களின் இடம். வயலின், மிருதங்கம் போனால் போகிறது என்று கடம்-கஞ்சிரா இரண்டில் ஒன்று (உப-பக்கவாத்தியம்) போன்ற பக்க வாத்தியங்களுடன் கச்சேரிகள் நடந்தன. சோமு, குன்னக்குடி, சீர்காழி போன்றோர் பல இசைக் கருவிகளின் துணையுடன் (அதை முழுமேடை full bench என்பார்கள்) ஒரு கூட்டமாக மேடையில் இடித்துப்பிடித்துக் கொண்டு அமர்களப் படுத்தினார்கள். தபலா டோலக் எல்லாம்கூட இடம் பெற்றதுண்டு. அதுவும் கோயில், பொதுத் திடலில் என்றால் ஆங்காங்கே கம்பத்தில் கட்டியிருக்கும் கூம்பு ஒலிபெருக்கியில் அனைத்தும் கலந்து பேரோசையாகக் காதில் இறங்கும்.
    இப்போதெல்லாம் கலைஞர்கள் தங்களது ஒலிபெருக்கியின் ஒலியைக் கூடுதலாக்கும்படி தொடர்ந்து வற்புறுத்துவதும் அதனால், பாடுபவரின் குரலே பின்தள்ளப் படுவதும், இயல்பாகிவிட்டது. கேட்போருக்குக் கேட்கும் திறமைக் குறைவோ என்னும்படி ஒலி காதில் வந்து அடிக்கிறது. இதனால் இசையில் இனிமைபோய் ஹிம்சை வந்து சேரும். சிலசமயம் வளரும் பாடகருக்கு மூத்த பக்க வாத்தியம் அமைந்துவிடும். (அது வேண்டிப் பெற்றதுதான்) அப்போது இசைப்பவரின் மையம் மூத்தவருக்குப் போய்விடும். பாடகர் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அசட்டு முகத்துடன் பாடுவதைப்பார்த்தால் பாவமாக இருக்கும். அம்மாதிரிக் கச்சேரிகளை பாடகரே பதிவு செய்வதும்கூட கடினம்தான். (‘பப்ளிக்கா யூஸ்பண்னக்கூடாது' என்னும் அறிவுறுத்தலும் இருக்கும்)
    பாடகர் தனது நிகழ்ச்சிக்குத் தேர்ந்தெடுக்கும் பாடல்களின் மொழி சார்ந்த சர்ச்சை தமிழ் இசை உலகை எப்போதும் உலுக்கும் ஒன்றுதான். கேட்போருக்கு அந்தப் பாடல்களின் வரிகள் முன்னரே தெரிந்திருப்பின் பாடுபவரைத் தொடரலாம். தெரியாவிட்டால்? பாடல்களை தெரிந்துகொண்டுதான் இசைக் கச்சேரிக்குப் போவது என்பது முடியுமா? அவர் பாடும்பாடல் தமிழேயானாலும் நமக்கு விளங்கிவிடுகிறதா என்றால் இல்லை. மொழி வேறு, பாடல்களைப் புரிந்துகொள்வது என்பது வேறு. அதற்குப் பயிற்சி வேண்டும். பாடகர் திரும்பத் திரும்ப பாடிய பாடல்களையே பாடுகிறார்  என்றும் குறை உண்டு.(அந்நாளில் பாரதியாரும் இதை ஒரு குறையாகச் சொல்லியிருக்கிறார்) நான் நினைப்பது பாடலை பாடுபவர் எல்லோருமே என்ன பாடல் இயற்றும் திறமை கொண்டவராக இருக்கமுடியுமா? பாடலை புனைபவர் எல்லோருமா அவற்றை தாமே பாடுகிறார்கள்? வாக்கேயக்காரர் என்று குறிப்பிடப்படும் சிலர்மட்டுமே தாமே பாடலை படைத்து அதைப் பாடும் விதத்தை ராகத்திலும் தாளத்திலும் முறைப்படுத்தி தமது சீடர்களிடம் ஒப்படைத்துள்ளார்கள். இன்று நம்மிடையே வாழும் பாலமுரளி அப்படிப் பட்டவர்தானே? சிலர் பாடுவதை மட்டும் தமது எல்லையாக வைத்துக்கொண்டார்கள். சிலர்பாட்டையும் படைத்தார்கள். அவற்றைத்  தாமே பாடவும் செய்தார்கள்.
    சங்கீத மும்மூர்த்திகள் என்று குறிப்பிடப்படும் மூவரும் சமகாலத்தவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தியாகராஜ ஸ்வாமி தமது இஷ்டதெய்வமான ராமனை எதிரில் அமர்த்திப் புகழ்ந்தார், கோபித்தார், கெஞ்சினார், வசைகூடப்பாடினார். அவருக்கு ராமர் ஒரு தோழன்போல. ஸ்யாமா ஸாஸ்திரிகளுக்கு காமாட்சிதான் எல்லாம். இப்படி அப்படி அதிலிருந்து நகரவில்லை. எப்போதும் தன்னை காப்பாற்றும்படி இறைஞ்சுவார். அதிலிருந்து அவர் விலகவே இல்லை என்பது பாடல்களை புரிந்துகொண்டால் உணர முடியும். இவர்கள் இருவரிடமிருந்தும் வேறுபட்டவர் முத்துஸ்வாமி தீக்ஷிதர். இசையில் ஒரு முனைவர் பட்டம் பெற்றவர்போல பலவிமான உத்திகளைக் கையாண்டு பாடல்களை ஒரு பொது அமைப்புடன் படைத்தார். வெறும் பக்திமாத்திரம் இல்லை அவற்றில். கோயில்களைப் பற்றிய விவரங்கள், பாடும் இறைவனின்/தேவியின் சிறப்புகள் அவைசார்ந்து வழங்கும் கதைகள், தாந்திரிக வழிபாடு பற்றின விவரங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். Dr.V.ராகவன் அவர்கள்  அந்த நாளில் எழுதிய இசைக்கட்டுரைகளின் தொகுப்பைப்படித்து இவற்றை ஒருவாறு புரிந்துகொண்டேன். தியாகராஜஸ்வாமியின் வாழ்க்கையை பலரும் உபன்யாசம் செய்வதை நாம் கேட்டிருக்கிறோம் ஆனால் மற்ற இருவரைப்பற்றிக் கேட்டது உண்டா?
    இசை விழா நிகழ்ச்சிகளில் அரங்குகளில் அமருவதற்கு இருக்கும் நாற்காலிகளின் வரிசை இடைவெளி பெரும்பாலும் ஒல்லியான உடல் வாகு இருப்பவர்களுக்கானது. கொஞ்சம் கனமான உடல்கொண்டவர் என்றால் பலரையும் கடந்து கிடைக்கும் அமர்வுக்குப் போவதற்குள் அமர்ந்திருப்பவர்களின் கால்களை மிதித்து, அவர்கள்மேல் சரிந்து, பின்புறத்தை அவர்களின் முகத்தில் அழுத்திப் போகநேரிடும். அங்கு சிலமணி நேரம் இப்படி அப்படி அசையாமல் ஒரேவிதமாக நாற்காலிகளில் அமர்ந்து இசையை 'அனுபவிக்க' வேண்டும். முதலிலேயே இயற்கை அழைப்பை ஏற்றுக்கொண்டு விடவேண்டும். தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று கச்சேரிகளுக்கு நடுவில் அதற்கு இடைவெளியிருக்காது. மீறி எழுந்து போனால் இடம் போய்விடும். ஒரு உல்லாசப் பயணம் போவதுபோல உண்பன, பருகுவன என்று முன்னேற்பாடாகப் போனால்த்தான் பசியை வெல்லலாம். அப்புறம் அடுத்த தொல்லை இசைப்பவரின் இசைக்குள் நுழைந்து பயணிப்பது. அதில் என்ன தொல்லை? மேலே சொன்ன தொல்லைகள்தான். அவற்றைத் தாண்டி இசையை ரசிப்பது மிகக் கடினம். மூன்றாவதாகப் பாடும் பாடகரின் கச்சேரி முடியும்போது முதல் பாடகரின் நிகழ்ச்சி சுத்தமாக பலகையில் எழுதியதை அழித்ததுபோல மனதிலிருந்து அகன்று போயிருக்கும். குரங்கு உணவை வாயில் அடக்கிக்கொள்வது போல எல்லாவற்றையும் உள்ளத்தில் இருத்திக்கொள்ள இயலுவதில்லை.
    மயிலை சீநிவாசா ஹாலில் கச்சேரி வருடம் முழுக்க நடந்த வண்ணம் இருக்கும். அங்கு வரும்  உள்ளூர் நபர்கள் சிலர் முதல் வரிசையில் அமர்வார்கள். பரவலாக அறியப் பட்டவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் மணி எட்டு ஆகிவிட்டால் போதும் வித்வான் பாடலை முடிக்கும்வரைகூடக் காத்திராமல் ‘பொசுக்' என்று எழுந்துவிடுவார்கள். ஆவர்த்தனம் வந்ததும் 'கொல்' என்று ஜனங்கள் எழுந்து வித்வானை அவமதிப்பது தெரிந்த செய்திதானே?
    அன்று போன நிகழ்ச்சி மயிலை சீநிவாசா அரங்கில் கபாலி ஃபைன் ஆர்ட்ஸ் அமைப்பினரது ஏறாபாடு. மாலை ஐந்து மணிக்குப் பாடியவர் ஒரு இளம் பெண்மணி. பெயர் குமாரி பிருந்தா மாணிக்கவாசகம். அவரது நிகழ்ச்சியில் மையமாக வராளி ராக ஆலாபனையும் 'ஆழிமழைக்கண்னா' திருப்பாவைப் பாடலும். இதுதான் நான் இவரது இசையை முதன் முறையாகக் கேட்பது. நன்கு home work செய்திருந்தார். இரவு ஏழு மணிக்கு பாலக்காடு ராம்பிரசாத் கச்சேரி. பாலாக்காடு மணி ஐயரின் பெண்வயிற்று மகன். (இது ஒரு செய்தியாக மட்டுமே) இவரது நிகழ்ச்சியிலும் ஹமீர்கல்யாணி ஆலாபனை. தொடர்ந்தது 'தூமணிமாடத்து' திருப்பாவைதான். நிரவல் ஸ்வரம் ஏதும் இல்லாமல் ‘தனி'. தொடர்ந்து லதாங்கி ராகம்,தானம்,பல்லவி. பல்லவிக்கு நான் இருக்கவில்லை.
    அரியக்குடி அவர்கள் திருப்பாவை முப்பது பாடல்களுக்கும் ராகம் தேர்ந்தெடுத்து பொருத்திக் கொடுத்திருக்கிறார். அந்த முப்பது பாடல்களையும் முழுநேரக் கச்சேரியாகவும் பலமுறை பாடியிருக்கிறார். என்னிடம் நான்குமணிநேர இசைக் கச்சேரி -அவர்பாடியது- இருக்கிறது.
    அரங்கைப்பற்றியும் சொல்லவேண்டும். மிகவும் பழையது இக்கட்டடம். முன்னர் அது குளிரூட்டப்பட்டிருக்கவில்லை. பாடகரின் மேடை மேசைகளைக் கொண்டுதான் அமைக்கப் பட்டிருக்கும். இப்போதும் அப்படித்தான். அரங்கில் பார்வையாக ஸ்ரீநிவாச ஸாஸ்திரியாரின் உருவ ஓவியம் முன்னர் இருந்தது. இப்போது அது ஒரு மூலையில் யார்கண்ணிலும் படாதவாறு ஒரு பிறையில் உள்ளது. பராமரிப்பு இல்லாததால் மேலே உள்ள கூறைத்தடுப்பு உடைந்து பல்லைக்காட்டுகிறது. சுற்றுசுவர் முழுவதும் புரவலர்களின் வருக என்னும் விளம்பர துணி தாறுமாறாகக் கட்டப்பட்டிருந்தது கண்களை உறுத்தியது.
    ஆனால் எனக்கு மகிழ்ச்சியளித்த விஷயம் நமக்கும் பாடகருக்கும் இடையில் மற்ற அரங்குகளைப்போலத் திரை தொங்கவில்லை. அவர்கள் மேடையில் ஏறி அமர்ந்து, சுருதி கூட்டி, தங்களுக்குள் பேசிக்கொண்டு என்பதாக அனைத்தையும் நாம் காணமுடிந்தது. இங்கு கட்டணம் கொடுக்க வேண்டியிருக்க வில்லை. மேடையிலிருந்து ஒரு பத்தடி இடை வெளியில் அமர்ந்து இசையைக்கேட்க முடிந்தது. பதிக்கப்பட்ட அமர்வுகள் இல்லை என்பதால் வசதிபோல் அதை நகர்த்திக் கொள்ளவும் முடிந்தது. ஒலியும் காதைப்பதம் பார்க்கவில்லை என்பதும் சொல்லவேண்டிய செய்தி.
    பெரிய அரங்குகளில் இப்போது கடைசீ வரிசைக்கு “நன்கொடை” -அதுவும் பால்கனியில்- ரூபாய் நூறு என்பதுதான் நடைமுறை. இசையைத் தவிர மற்ற எல்லாம் உள்ளது இசையைத்தான் தேடவேண்டும்.
அரவக்கோன்