Wednesday, November 28, 2012

Oviya ithazkaLArticle-1


This article appeared in 'maraththadi' net group on Sun, 24 Oct 2004 
சபையோருக்கு வந்தனம்,
‘மரத்தடி'யின் அங்கத்தினனாக ஆனபிறகு நான் அதிகமாக எதிலும் ஓவியம் பற்றி பேசவில்லை. ஓவியம் / சிற்பம் பற்றிய சஞ்சிகைகள் நம்மிடம் இல்லை. இது தொடர்பாக என் மனதில் தோன்றிய சில எண்ணங்களை இங்கு உங்கள் முன் வைக்கிறேன். ஒரு விவாதமோ அல்லது மேல் விவரங்களோ வரக்கூடும் என்று எதிர்பார்த்து.
ஓவியம் / சிற்பம் தொடர்பான புத்தகங்கள் தமிழில் காணக் கிடைப்பதில்லை என்பது பொதுவாக உள்ள மனக்குறை. மற்ற மொழிகளில் குறிப்பாக ஆங்கிலம், ப்ரெஞ்ச், ஜெர்மன் போன்ற பல மொழிகளில் இவை ஏராளமாக பதிப்பிக்கப் படுகின்றன. மிக நேர்த்தியான, தரம்மிகுந்த, விரிவான அலசல் அணுகு முறையுடன், சிறந்த ஓவியங்களின் மூலப் பிரதியின் வண்ணங்கள் மாறாமல் இவை கிடைக்கின்றன.
தமிழுக்கு இது சாத்தியமில்லை என்பது அனைவருக்கும் தெரியுமென்றாலும் இங்கு திரும்பவும் சொல்வதில் தவறேதுமில்லை. இவ்வகைப் புத்தகங்கள் பதிப்பிட செலவு பிடிக்கும். அவற்றுக்கு விற்கும் வாய்ப்பு குறைவு. அதன் விலை மிகவும் அதிகமாக இருக்கவேண்டிவரும். எந்தப் பதிப்பாளரும் நஷ்டப்பட விரும்பமாட்டார். (ஓவிய நண்பர் ஆதிமூலம் தமது கைப்பணத்தை போட்டு -இரண்டு லக்ஷத்துக்குப் பக்கம் என்று கேள்வி- தமதி கோட்டோவியங்களை புத்தகவடிவில் கொணர்ந்தார். அவற்றில் பெரும்பாலான பிரதிகள் தம்மிடமே இருப்பதாக ஒரு முறை சொன்னார்) ஓவியங்களற்ற வெறும் எழுத்து வடிவத்தில் ஓவியம் பற்றி என்ன சொன்னாலும் முழுமையாகது அல்லவா? ஆனால் ஹிந்தி இந்திய அரசின் அரசு மொழியாக இருப்பதால்  ஓவியம் பற்றின நூல்களை அரசாங்கமே சாஹித்ய அகாடமி, லலித கலா அகாடமி போன்ற அமைப்புகளின் மூலம் பதிப்பிக்கின்றது. இதனால் வட இந்தியாவில் சென்ற 10 நூற்றாண்டுகாலமாக புழக்கத்தில் இருந்த, அரசர்களால் போஷிக்கப்பட்ட கையடக்க ஓவியங்கள் (miniature paintings) புத்தகவடிவில் காணக் கிடைக்கின்றன. அவை ஹிந்தி, ஆங்கிலம் இரு மொழிகளிலும் அச்சடிக்கப்படுகின்றன.
தேனுகா தமிழில் சில மேலை நாட்டு ஓவியர்களைப் பற்றி புத்தகங்கள் கொண்டுவந்தார். அதற்கு வாசகரிடமிருந்து என்ன எதிர்வினை வந்தது என்பது தெரியவில்லை. தமிழில் ஓவியம் பற்றி எழுதும் மொழி எல்லோருக்கும் பரிச்சியமானதாக இருக்கமுடிவதில்லை. பெருவாரியான ஓவியம் தொடர்பான சொற்கள்  மேலை நாட்டில் பயன்படுத்தியவிதமாகவே இங்கும் பின்பற்றப் படுகின்றன. குறிப்பாக நவீன சிந்தனை எல்லாக் கலை இலக்கியங்களிலும் மேலை நாட்டு தாக்கம் கொண்டதாகவே நம் நாட்டில் இருந்துவருகிறது. terminology  என்று விளிக்கப்படும் வேற்றுமொழி கலைச் சொற்களுக்கு தமிழில் உரிய சொல்லைத் தேர்ந்தெடுக்க முடிவதில்லை.
ஓவியம்/சிற்பம் தொடர்பான இதழ்களும் மேலை நாடுகளில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. சமகால நிகழ்வுகள் திரிபுகள் முன்னேற்றங்கள் கலைஞர்களின் தன் நிலை விளக்கங்கள் விவாதங்கள் நமக்கு இவற்றின் மூலம் தெரியக் கிடைக்கின்றன.
இந்தியாவில் எழுத்தாளர் முல்க்ராஜ் ஆனந்த் ‘மார்க்' ‘marg' என்னும் பெயரில் மூன்று மாதங்களுக்கு ஒரு இதழ் என்றவகையில் ஐம்பதுகளிலேயே கலை இதழ் கொண்டுவந்தார். மொழி ஆங்கிலம். சென்னையில் k.c.s. பணிக்கரின் மேற்பார்வையில் ‘ஆர்ட் ட்ரெண்ட்” ‘Artrend'  என்னும் இதழ் ஆங்கில மொழியில் மூன்று மாதங்களுக்கு ஒன்று என்பதாக சில ஆண்டுகள் வந்து ஓரளவு இக்குறையை தீர்த்தது. தற்சமயம் “ ஆர்ட் இன்பெர்மெஷன்” ‘Art infermation"  என்று ஒரு ஆங்கில இதழ் (இதுவும் மூன்று மாத இதழ்தான்) மும்பையிலிருந்து வந்துகொண்டிருக்கிறது.
மற்ற இந்திய மொழிகளில் எப்படியோ தெரியவில்லை, தமிழில் ‘தமிழ்நாடு ஓவியம் நுண்கலை' அமைப்பு (State lalit kala akademi) ஆங்கிலத்திலும் தமிழிலுமாக ஆறு மாதத்திற்கு ஒரு இதழ் கொணர்ந்து கொண்டிருக்கிறது. இதுவும் குறிப்பிட்ட இடைவெளியில் வருவதில்லை. கடந்த சில ஆண்டுகளாக ஓவியம்/சிற்பம் திரனாய்வாளர், கவிஞர் இந்திரன் இதன் ஆசிரியராக உள்ளார். இவை பற்றி சிறிது விரிவாக எனது எண்ணங்களையும் மதிப்பீடுகளையும் உங்களுடன் பகிர விரும்புகிறேன். மீண்டும் வந்தனம் சொல்லி, அரவக்கோன்

No comments: