Thursday, January 31, 2013

"இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்" 02-பழங்குடி இன மக்களின் ஓவியங்கள்.

02-பழங்குடி இன மக்களின் ஓவியங்கள்.



1. வார்லி ஓவியங்கள்
2. ஒரிசா ஓவியங்கள்

1.வார்லி பழங்குடியினரின் ஓவியங்கள்

வார்லி பழங்குடியினர் பெருமளவில் காணப்படும் பகுதி மேற்கிந்திய கடலோர நிலமான ‘தானே' மாவட்டமாகும். மும்பை இதற்கு வெகு அருகிலே தான் உள்ளது. 10ஆம் நூற்றாண்டிலிருந்து இந்த இனம் பற்றித் தெரியவந்துள்ள தாக வரலாற்று வல்லுனர்கள் கணிக்கின்றனர். இவர்களின் மூதாதையர் பற்றின தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.

பெரும்பாலும் எல்லா வார்லி இனத்து மக்களும் ஓவியம் தீட்டுகிறார்கள். ஓவியமென்பது அவர்களது இனம்சார்ந்த செய்திகளை, சடங்குகளைச் சொல்லும் மொழியாகப் பயன்படுகிறது. எழுதுவதென்பது அவர்களிடம் இல்லை. வார்லி மக்கள் ஓவியங்களைத் தங்கள் இல்லத்தின் உட்சுவர்களில் தீட்டுகிறார்கள். அவை மண்ணாலானவை. ஓவியங்களில் கருப்பொருளென்பது இயற்கை சார்ந்ததாகவே உள்ளது. அறுவடை பற்றிய ஓவியம் அவற்றில் ஒன்று. திருமண விழா பரவலாக ஓவியமாக்கப்படும் மற்றொன்று. செழித்து வளர்ந்து அறுவடைக்கு உகந்ததாக இருக்கும் பயிர் நிலம், வானத்தில் பறக்கும் பல்வேறு பறவையினம், இசைக் கருவியை மீட்டும் ஒருவனைச் சுற்றிக் கைகோர்த்து நடனமிடும் மக்கள், தினசரி வேலைகளை செய்யும் பெண்டிர், விளையாடும் சிறார் போன்ற காட்சிக்ளை அவர்கள் திரும்பத் திரும்ப  ஓவியங்களில் காட்சிப் படுத்தினர்.

வார்லி இன மக்களின் இல்லங்களில் காணப்படும் சுவர் ஓவியங்கள் அவற்றின் தன்மையால் வரலாற்றுக்கு முற்பட்ட சுவர் ஓவியங்களின் சாயலைக் கொண்டுள்ளன. வார்லி இனப் பெண்டிர்தான் பெரும்பாலும் இவ்வோவியங் களைப் படைக்கிறார்கள். இல்லத்தின் மண்சுவரை பசுஞ்சாணத்தையும் கரிப் பொடியையும் நீரில் கரைத்துக் கலந்த குழம்பால் முறைப்படி பூசி, அதன்மீது வெயிலில் உலர்த்திக் காயவைத்த அரிசியைப் பொடிசெய்து உண்டாக்கிய வெள்ளை வண்ணம் கொண்டு ஓவியங்களைப் படைத்தனர். அவை நேர்கோடுகள் இல்லாதவை. அந்த இடத்தில் புள்ளிகளும் தொடர்ந்த சிறுகோடுகளும் உருவங் கள் வரையப் பயன்பட்டன.

அவர்களது ஓவியங்களில் நாம் இந்துமத இதிகாச புராண கடவுளரையோ, அவற்றில் உள்ள கதைகளையோ காண முடியாது. அவர்களுடைய திருமணக் கடவுளான ‘பால்கட்' ஓவியத்தில் மணமக்கள் புரவியின்மேல் ஊர்வலம் செல்லும் காட்சி தவறாது இடம்பெறும். புரவி என்பது அவர்களது பொருளாதார எல்லைக்கு அப்பாற்பட்டது. அந்த ஓவியம் அவர்களுக்கு மிகவும் புனிதமானது. அது இல்லாமல் ஒரு திருமணம்கூட அங்கு நிகழாது. இம் மாதிரியான கருப் பொருள் கொண்ட ஓவியங்கள் மீண்டும் மீண்டும் படைக்கப்பட்டன. மறை முகமாக அவை அவர்களுக்கு அருள் பாலித்தன. அல்லாமலும் அவ்வோவியங் கள் தங்கள் தெய்வங்களின் சக்தியையும் ஆற்றலையும் வெளிக் கொணரப் பயன்படுத்தும் கருவிகள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையும் அவர்களிடம் நிலவுகிறது.

அவர்களுக்குத் தங்கள் ஓவியங்களின் பெருமை நன்றாகவே தெரிந்திருக் கிறது. சுற்றுலாப் பயணிகள் அவற்றைப் பெரிதும் விரும்பி வாங்கிச் செல்கிறார்களென்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சிதான். இந்நாளில் இவ்வோவியங் கள் சுவரிலிருந்து இடம்பெயர்ந்து சிறிய தாள்களுக்கும், கைத்தறி துணிகளுக்கும் வந்துவிட்டன. மரபை அவை பின்பற்றும் அதே நேரத்தில் நவீனத்தையும் ஒப்புக் கொள்கின்றன. அவற்றில் வண்ணங்களும் இடம் பெறுகின்றன. இந்திய அரசாங்க ‘கைத்தொழில், நெசவு மையம்' அவர்களுக்கு இந்த ஓவியங்களைக் காகிதத்தில் தீட்ட தேவையான உபகரணங்களைத் தந்துதவுகிறது. மேலும் அவற்றை கலைச் சந்தையில் விற்றும் கொடுக்கிறது.

2. ஒரிசா பழங்குடியினரின் ஓவியங்கள்

ஒரிசா மாநிலம் பழங்குடி இனத்தினரின் பல பிரிவுகளை பெருவாரியாகக் கொண்டது. அவைகளில் ‘சௌரா', ‘சந்தால்' பிரிவு மக்கள் தமது இல்லங்களின் உட்சுவற்றில் ஓவியங்கள் தீட்டுகிறார்கள். சுதந்திரமான வாழ்க்கையில் கிட்டும் மகிழ்ச்சி அவர்களது கலைகளில் வெளிப்படுகிறது. அவர்களது கலை சார்ந்த உணர்வுகளின் வெளிப்பாடு இசை, நடனம், என்றுமட்டுமல்லாமல் உடை, அணி கலன்கள், சுவர் ஓவியங்கள், மரச் செதுக்கல்கள் போன்றவை மூலமாகவும் வெளிப்படுவதைக் காணமுடிகிறது.

‘சந்தால்' ஓவியங்கள்

‘சந்தால்' பிரிவின மக்களின் அழகுணர்ச்சி அவர்களது இல்லங்களின் உட் சுவர் ஓவியங்களில் வெளிப்படுகிறது. அவை அம்மக்களின் உள்ளுணர்வு களையும், சுற்றுசூழலின் மேல் அவர்களுக்கு இருக்கும் நேசதையும், அக்கரையையும், அவர்கள் பின்பற்றிய சமய நம்பிக்கைகளையும் உள்ளடக்கிய வனவாக உள்ளன. மேலும், அவை அவர்களது கடந்த கால வரலாற்று வெளிப் பாடுகளாகவும் கூட உள்ளன.

‘சந்தால்' இனப் பெண்டிர்தான் சுவர் ஓவியங்கள் தீட்டுவார்கள். மழை காலம் முடிந்தவுடன் அவர்கள் தங்கள் இல்லங்களை சுத்தம் செய்து, மண் கொண்டு சுவர்களை பூசுவார்கள். சுவற்றில் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் வருடாந்திர அறுவடைக்கு முன்பு கொண்டாடப்படும் ‘ஷோரே' என்னும் விழாவிற்கு முன்னர் மிக நேர்த்தியான விதத்தில் பூசப்பட்ட இல்லத்தின் உட்புறச் சுவர்களில் ஓவியங்கள் படைக்கப்படும். இயற்கை சார்ந்த வண்ணங்களை தாங்களே செய்த தூரிகைகள் கொண்டு உருவங்களில் பூசுவார்கள். பல சமயங்களில் சிறு துணியும், கை விரல்களும் கூடத் தூரிகையின் தொழிலைச் செய்யும்.

ஓவியங்களில் வண்ணங்கள் சீராகவும் அடர்த்தி கொண்டதாகவும் பூசப் பட்டிருக்கும். நெளி கோடுகள் மற்றும் கோணம், நீள் சதூரம், நாற் கோணம் கொண்ட வடிவங்கள் போன்ற கணித வடிவியல்களையும் ஒவியங்களில் கலந்து அவற்றுக்கு எழிலூட்டினார்கள். அவ்வோவியங்களின் சிறப்பம்சம் அவர்கள் மலர்களையும் தாவரங்களையும் பல் வேறு நூதன வடிவங்களில் தீட்டியதுதான். புலி, யானை, பறவைகள், மீன், பாம்பு போன்றவற்றின் வடிவங்களை உருமாற்றம் செய்தும், அவர்களுடைய வாழ்வியல் முறைகளையும், தினசரி செயற்பாடு களையும், அனைவருக்குமான பொது விழாக்களையும் சித்தரித்தும் ஓவியங்கள் அமைந்தன. மத்தளம்கொட்டுவோரும், பாடல்களை இசைப்போரும், கைகோர்த்த மக்கள் வட்டமாக ஆடுவதும் அவற்றில் இடம்பெற்றன.

நாகரீக உலகுக்கு இவர்களின் ஓவியங்கள் அறிமுகமாகி அதன் கலைநயம் பற்றி பரவலாகத் தெரியத் தொடங்கிய பின் அந்த ஓவியங்களிலும் வெளி உலகின் தடம் பதிந்து விட்டது. என்றாலும், உள்ளார்ந்த கிராமங்களில் இன்னும் அவர்களது ஓவியங்கள் வெளி பாதிப்பு அற்றதாகவே உள்ளன.

“சௌரா”ஓவியங்கள்

தங்கள் இல்லத்து உட்சுவர்களை ஓவியங்களால் நிரப்பும் ‘சௌரா' இனத்தவர் இன்னொரு பிரிவினர். அவர்களின் ஓவியங்களில் கருப்பொருள் என்பது பெரும்பாலும் சடங்குகள் சார்ந்ததாகவும், அவர்கள் வணங்கும் கடவுளரின் உருவங்களைக் கொண்டதாகவும் இருக்கும். (‘itital') ‘இடிடால்' என்று குறிக்கப்பெறும் கடவுளர் உருவங்கள் மிகுந்த வணக்கத்துக்கும் கொண்டாட்டத்திற்குமானது. அவர்களது மதச்சடங்கிற்கு ஏற்ப அவற்றின் உருவமும் அமைப்பும் மாறுபடும். ராய்கடா, கஜபடி, கோரபுட் நிலப் பகுதிகளில் வாழும் அவர்கள் இல்லங்களில் இவ்வகை ஓவியங்கள் அதிக அளவில் தென்படு கின்றன. ‘லஞ்சியா சௌரா' பிரிவு பழங்குடியினர் இன்றளவும் தமது மரபு வழியிலேயே சுவர் ஓவியங்கள் தீட்டிவருகின்றனர். ‘சபரா', ‘சவுர்', ‘சரா', ‘சௌரா' என்று பல பெயர்களில் வாழும் இடத்துக்கு ஏற்றாற்போல அவர்கள் அழைக்கப் படுகின்றனர். மாபாரதத்து ஏகலைவனும், இராமாயணத்து சபரியும் தங்கள் இனம்தான் என்பது அவர்களது நம்பிக்கை.

அவர்களது கடவுளர் உருவங்கள் வணங்கப்படுவதற்கும், முன்னோர்களை திருப்தி செய்யவும் தீட்டப்படுபவை. சடங்குகள் நிகழும்போது பழையவை அழிக்கப்பட்டு புதிய ஓவியங்கள் தீட்டப்படும். சடங்கு சார்ந்த, நியதிகளுக்கு உட்பட்டு இருக்கும் அவற்றில் பழுதில்லாத எழிலும், கலைச்செரிவும் இருப்பதைக் காணலாம். உண்மையில் இவைதான் அவர்களது மொழியும், தத்துவமும் எனலாம். ஒவ்வொரு கடவுளரின் உருவமும் ஒரு குறிப்பிட்ட செய்தி சொல்வதற்கென்று அமையும். அவற்றின் நுணுக்கமான விவரங்கள் ஓவியத்தில் இடம் பெறும். அந்த இனமக்களின் தினசரி வாழ்க்கையையும் அவற்றில் நாம் காணமுடியும். விதை விதைக்கும் திருநாள், கடவுளரின் வழி, செழிப்பான அறுவடை, அம்மை ஒழிப்பு, இறந்தவர் கீழுலகம் சேரும் சடங்கு என்று பல வகைகளில் அவர்களது ஓவியங்களின் கருப்பொருள் அமையும்.

‘சௌரா' இனத்து மக்கள் மூங்கில் குச்சிகளை தூரிகையாகப் பயன்படுத்து கிறார்கள். விளக்கு புகையிலிருந்து கருப்பும், வெயிலில் காயவைத்துப் பொடி செய்த அரிசியை மாவாக்கி நீரில் கூழாகக் கரைத்துக்கொண்டு, அதில் வேர், மூலிகைகளிலிருந்து பெறப்படும் சாற்றை கலந்து, கிடைக்கும் வெள்ளையும் கொண்டு ஓவியங்களைத் தீட்டுகிறார்கள். இம்முறை பல காலமாகப் பின்பற்றப் பட்டு வருகிறது. பழங்குடி மக்களின் ஓவியங்களில் வண்ணம் என்பது இருப்ப தில்லை என்னும் செய்தி சிந்தனைக்குரியது. அதுபோலவே அவர்கள் வெள்ளை வண்ணம் உண்டாக்கும் முறையும் ஒன்றாக இருப்பதும் அவ்விதமான ஒன்றுதான். இந்நாட்களில் நகர்புற செல்வந்தர் தமது இல்லச் சுவர்களிலும், அலுவலகச் சுவர் களிலும் இந்த ஓவியங்களைத் தீட்டச்செய்து அலங்கரிப்பது அதிகமாகியுள்ளது.

No comments: