Wednesday, May 22, 2019

20ஆம் நூற்றாண்டு ஓவியர்

 20ஆம் நூற்றாண்டு ஓவியர் சிலரை நினைக்கும் விதமாக அவர்களைப் பற்றின சிறு குறிப்புடன் அவர்களது படைப்புகளையும் அவ்வப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இதில் இந்திய ஓவியர்கள்தான் இடம் பெறுவர். என்றாலும் இலங்கை ஓவியருக்கும் இடம் உண்டு. நம்மவருக்கு தமிழ்நிலத்து ஓவியர்களையே அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது.
ஜார்ஜ் கீட் (George Keyt)
(பிறப்பு-17 ஏப்ரல் 1901 இறப்பு 31 ஜூலை 1993)
ஓவியர் ஜார்ஜ் கீட் இலங்கையில் பிறந்தவர். அந்த நாட்டில் மிகப் பெரிய கலைஞராகப் போற்றப்படுபவர். அவரது படைப்புகளில் க்யூபிஸத்தின் தாக்கம்- -குறிப்பாக பிகாஸோ-வெளிப்படையாகத் தெரியும். அவரிடம் அவரது சமகால ஓவியர் ஹென்ரி மத்தீஸின் பாதிப்பும் உண்டு. அவர் தமது கல்வியை ஆஙிலேயரால் நடத்தப்பட்ட கண்டியில் உள்ள டிரினிடி கல்லூரியில் பெற்றார். பௌத்த, ஹிந்து மதங்கள் அவரைப் பெரிதும் ஈர்த்தன. இதனால் புத்தரின் ஜாதகக் கதைகளும், ஹிந்து புராண இதிகாசங்களும் அவரது படைப்பு களாயின. அஜந்தா ஓவியவழியும் அவரது ஓவியங்களிலும் படிந்தது. புத்தரின் ஜாதகக் கதைகளிலிருந்து தேர்ந்தெடுத்து பல ஓவியங்களைத் தீட்டினார். அவர் ஆழ்ந்த ஈடுபாடுகொண்ட கவிஞரும் கூட. ஜெயதேவரின் ‘கீதகோவிந்தம்' அவரை மிகவும் பரவசப்படுத்தியது. அதை ஆங்கிலத்திலும், சிங்களமொழியிலும் கவிதைகளாக வடித்தார். நூலில் தமது கோட்டு ஓவியங்களையும் இணைத்தார். 1940 இல் அது மும்பையில் அச்சிடப்பட்டது. அந்தக்கோட்டு ஓவியங்களில் காணப்படும் எளிமையும் திடமான பிசிர் இல்லாத கோடுகளும் என்னை நான் ஓவியக் கல்லூரியில் கற்ற சமயம் பெரிதும் பாதித்தன. இந்தியாவுக்கு அடிக்கடி வந்து குறுகிய, நீண்டகாலத் தங்கல்கள் அஜந்தா ஓவியம், பௌத்த சிற்ப நுணுக்கங்கள் பற்றின தெளிவையும் பெற உதவின. ரபீந்திரநாத் தாகுர் இலங்கைக்கு 1930இல் வருகை தந்தபோது அவரைச்சந்தித்தது ஜார்ஜ்க்கு கலைபற்றின ஒரு புதிய கதவை திறந்துவைத்தது.
1943 இல் இலங்கையில் தோன்றிய கொலம்போ 43 குழு (Colombo'43 Group) இவர்போன்ற பல இளம் ஓவியர்களை ஒருங்கிணைத்தது. தமக்கான பாணியில் பயணித்த அவர்கள் ஒரு குழுவாகவே இயங்கினர். இலங்கையின் கண்டி நடனத்தை பிரபலமாக்க பெருமுயற்சிகளை அக்குழு எடுத்துக்கொண்டது.
இலங்கையில் தபால் தலைகளில் இவரது ஓவியங்கள் பலமுறை இடம் பெற்றன. அவரது ஓவியங்கள் உலகெங்கும் காட்சிப்படுத்தப்பட்டன.

ரஸிக் துர்காசங்கர் ராவல் (Rasik Durgashankar Raval)
பிறப்பு-1928 இறப்பு-1980
குஜராத் மாநிலத்தில் (சௌராஷ்டிரத்தில்) பவநகரில் 1 ஆகஸ்ட்1928 இல் பிறந்த ரஸிக் ராவல் பள்ளிப் படிப்பை முடித்தபின் மும்பை ஜே.ஜே. ஓவியக் கல்லூரியில் தனது முதுநிலைப் பட்டப் படிப்பை நிறைவுசெய்தார். சுவர் ஓவியங்கள் பற்றி விரிவாக கற்பதற்கு கல்லூரி அவருக்கு உதவித்தொகை அளித்தது. மேற்கத்திய தத்ரூப படைப்பில் மிகவும் திறமைசாலியாக விளங்கிய அவர் அதிலிருந்து விலகி தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார்.
அவர் ஓவியர் மட்டுமல்ல, ஓவிய ஆசிரியர், கலை விமர்சகர், இதழியலாளர் மற்றும் கலைக்கட்டுரைகள் எழுதியவரும்கூட. ஹாஜி மொஹம்மது அலராக்கியா ‘Hajji Mohammad Alarakhiya ' என்பவரால் 1915இல் தொடங்கப் பட்ட ‘விஷமி சதி' என்னும் குஜராத்தி மொழி கலை இலக்கிய இதழில் ஓவியராக சேர்ந்தார். இந்த இதழ் 1921 இல் ஹாஜியின் மரணத்தால் நின்று போனது அதில் பெற்ற அனுபவத்தால் தானே ‘குமார்' என்னும் கலை இலக்கிய இதழைத்தொடங்கினார். மும்மாத இதழான அது இன்றும் வெளி வந்து கொண்டிருக்கிறது. 1919 திலிருந்து அஹமதாபாதில் வசிக்கத் தொடங்கிய அவர் அங்கு ஓவியப் பள்ளி ஒன்றையும் தொடங்கினார். சிறுவர் நூல்கள் பவவற்றுக்கு ஓவியங்களை தீட்டினார். அவை அவருக்குப் பெரும் புகழை கொணர்ந்தன. ‘சந்தாபொலி' என்னும் குஜராதிமொழி சிறுவர் இதழில் அவரது ஓவியங்கள் தொடர்ந்து இடம் பெற்றன. தன்வரலாறு நூல், (Gujarat Ma Kala Na Pagran) 2010  இல் மறுபதிப்பு செய்யப்பட்டது. காகா சாஹேப் கலேல்கர் அவரை ‘கலாகுரு' என்று பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்.
அவரது படைப்புகளில் சௌராஷ்டிர நிலத்தின் உயிர் இழையோடியது. அவற்றில் நவீனத்துவம் இருந்தது. ஆனால் அது மேற்கின் நிழல்கூடியதல்ல. இந்திய மரபுவழியும் அதில் இருக்கவில்லை. ஓவியங்களின் பின்புலம் எப்போதும் வெளிரிய நிறம் கொண்ட வெற்றுப்பரப்பாகவே விடப்பட்டது. அவரது ஓவிய உருவங்கள் எப்போதும் எளிய வாழ்க்கை வாழும் மக்களை கொண்டதுதான். அவ்வுருவங்கள் இழுத்து நீட்டப்பட்டவை மெலிதானவை. அவர்கள் அணிந்த உடை ஒரு வெள்ளைத் துணிமட்டுமே. வண்ணங்களும் மிகக் குறைவானவையே. கருப்பு, கபிலம் வெளிரிய மஞ்சள் வெள்ளை என்று அவை அடங்கிவிடும். தூரிகைச் சுவடு தெரியாதவிதமாக வண்ணங்கள் இடம் பெற்றன. தனித்த உடையற்ற பெண் உருவமும் அடிக்கடி ஓவியமாயிற்று. அவரது படைப்புகள் நீரவண்ணவகையைச்சேர்ந்தவை என்பது என் ஊகம் அந்த விவரம் கிடைக்கவில்லை.
அவரது முதல் தனிநபர் காட்சி 1954 இல் நடந்தது.
ஜே.ஜே.ஓவியக் கல்லூரி 1916 இல் மாயோ தங்கப் பதக்கம் வழங்கிச் சிறப்பித்தது. குஜராத் இலக்கிய அமைப்பு அவரது கலைக்கட்டுரைத் தொகுப்புக்கு மிக உயர்ந்த பரிசான ‘ரஞ்சித்ராம் சுவர்ண சந்த்ரக் (Ranjitram Suvarna Chandrak 1930) அளித்தது. பத்மஸ்ரீ விருதை 1965 இல் இந்திய அரசு அவருக்கு வழங்கியது. லலித கலா அகாதமி 1970இல் the Fellow என்னும் அந்தஸ்தை வழங்கியது.
ஸ்யவாக்ஸ் சாவ்டா (Shiavax Dhanjibhoy Chavda)
தோற்றம்-1914--மறைவு  1990
ஸ்யவாக்ஸ் சாவ்டா குஜராத் மாநிலத்தில் உள்ள நவசாரி மாவட்டத்தில் 1914 இல் பிறந்தார். தனது 16 ஆவது வயதில் (1930) அவர் மும்பையில் உள்ள ஜே.ஜே.ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார். 1935 இல் இலண்டன் நகரில் உள்ள ஸ்லேட் ஓவியப் பள்ளியில் (The Slate School) உயர் கல்வி பெற்றார். 1937 இல் பாரிஸ் நகரில் உள்ள Academic de la Grande Chaumiere  என்னும் ஓவியப் பள்ளியில் தனது கூடுதல் உயர் படிப்பை முடித்தார்.
ஓவியப் படிப்பை முடித்த சாவ்டா இந்தியா முழுவதும் பயணித்து நம்மவரின் பண்பாடு, கலைச் சிந்தனை ஆகியவற்றைப் பற்றின ஆழ்ந்த அனுபவத்தை ஆலயங்களிலிருந்தும் எளிய மக்களிடமிருந்தும் பெற்றார். எளிய கிராம மக்களின் களங்கமற்ற வாழ்க்கை அவரை மிகவும் ஈர்த்தது. தமது பயணத்தில் காண்பதையெல்லாம் கோட்டோவியங்களாகப் பதிவு செய்து கொண்டார். அவரிடம் எப்போதும் ஒரு வரையும் புத்தகம் இருந்தது.
இந்திய நடன வகைகளில் அவருக்கு ஆழ்ந்த பற்று இருந்தது. அவற்றில் இருக்கும் ஒய்யார அசைவுகளும், திடமான தாவல்களும் அவரது ஓவியங்களில் இடம் பெறத்தொடங்கின. பரத நாட்டியம் முதல் பழங்குடி மக்களின் குழுநடனம் வரையிலும் அவற்றில் அடங்கும். அவரது மனைவி குர்ஷித் வாஜிஃப்தார் பரதநாட்டியம் மோஹினி ஆட்டம் ஆகிய இருவகை நடனத்திலும் முதிர்ச்சி பெற்ற நடனமணி.யாகத் திகழ்ந்தார். தனது சகோதரிகளுடன் மேடைகளில் நடன நிகழ்ச்சிகளைக் கொடுத்து வந்தார். நடனத்துடன் அவருக்கு இருந்த இருக்கம் மனைவியால் இன்னும் அதிகமானது. நிகழ்ச்சிகளின்போது அவர் ஒரு டார்ச் விளக்கின் ஒளியில் நடன அசைவுகளை வரைந்து கொண்டிருப்பார்.
ஓவிய மாணவராக அவரை பாதித்த இரு ஓவியர்கள் 1-பேராசிரியர் Randolph Schwabe 2- Vladimir Polumin. பாரிஸில் இருந்தபோது ருஷ்ய பாலே நடனத்துக்கான அரங்க அமைப்பை Leon Bakst, P. Picasso இருவருடனும் சேர்ந்து அமைத்தார். இவரது சகலபாடியான முல்க்ராஜ் ஆனந்த் நடத்திய மும்மாத கலை இதழான ‘மார்க்' (Marg)  தொடர்ந்து இவரது கலை சார்ந்த கட்டுரைகளை வெளீட்டுவந்தது.
சாவ்டா தனது ஓவிய வழியை இளமைக்கால தத்ரூப உருவங்களைப் படைத்ததிலிருந்து வடிவமைத்துக் கொண்டார். உருவங்களிடம் காணப்படும் உறுதி, அசைவுகள், தோற்றம் போன்றவற்றைக் குறைந்த கோடுகளில் தமது ஓவியங்களில் வெளிப்படுத்தினார்.
சிறுவர் கதைகளுக்கும் சிறுவர் இதழ்களுக்கும் நாட்டியப் புத்தகங்களுக்கும் தொடர்ந்து ஓவியங்களை (Drawings)  தீட்டிக் கொடுத்தார். இசைக் கலைஞர் நடனக் கலைஞர் என்று எல்லோரையும் தமது ஓவியத்தில் பதிவுசெய்தார். ஹிந்துஸ்தானி இசையில் அவருக்குப் பெரும் நாட்டமிருந்தது. நடிகர் சுனில்தத், வைஜயந்திமாலா நடித்து வெளிவந்த ‘ஆம்ரபாலி' திரைப்படத்துக்கு உடை, அணிகலன்கள், மாளிகை அமைப்பு போன்றவற்றை அமைத்துக் கொடுத்தார்.
1956 இல் லலித கலா அகாதமி அவரை இந்தியாவின் மிகச்சிறந்த ஒன்பது படைப்பளிகளில் (Eminent Artist)  ஒருவராகத் தேர்ந்தெடுத்தது. முதுமைக் காலத்தில் மும்பையிலுள்ள டாடா திரையரங்கில் தாந்திரிக சுவர் ஓவியங்களை ஏணிவைத்த மேடையின்மீது ஏறி தீட்டுவதற்கு அவர் தயங்கவில்லை. அந்தத் தாந்திரிகம் சார்ந்த பல நூல்களையும் படித்து உள்வாங்கிக்கொண்டபின்னரே ஓவியங்களைத்தீட்டினார். அவை இன்றும் அங்கு உள்ளன. அவர் தமது வாழ்நாள் இறுதிவரை மும்பையிலேயே வசித்தார்.
குறிப்பு
இவரது மனைவிக்கு அக்காளும் (ஷிரின் வாஜிஃப்தார்)  தங்கையும் (ரோஷன் வாஜிஃப்தார்) உண்டு. பார்சி வகுப்பைச் சேர்ந்த இவர்கள் சிறுவயதில் அனாதை இல்லத்தில் வளர்க்கப்பட்டனர். மூத்தவளான ஷிரின் வாஜிஃப்தாரின் திருமணம் முல்க்ராஜ் ஆனந்த் உடன் நடந்தது. பார்சி சமூகத்தில் இம்மூவரும்தான் முதன் முதலாக இந்திய நடனத்தைக் கற்று மேடையேறி வாஜிஃப்தார் சகோதரிகள் என்று பெரும் புகழ் எய்தியவர். மும்பையில் ‘நிருத்ய மஞ்சரி' என்னும் பெயரில் நடனப் பள்ளி ஒன்றைத் துவங்கி நடதினர். 

No comments: