Wednesday, October 26, 2011

வீடுகளும் கோடுகளும்

‘எனது ஓவியப்பயணம்' ‘வீடு பேறு' என்னும் தலைப்புகளில் நான் முன்னர் எழுதியதை ஒருங்கிணைத்து எனது வாழ்க்கை பதிவாக ஒரு நூல் வெளியிடும் முயற்சி இது. நூலுக்குத் பெயர் இடவில்லை. ‘எனது ஓவியப்பயணம்' “ராயர் காபி கிளப்' “மரத்தடி” குழுமங்களில் தொடராக வந்தது. “வீடு பேறு” எதிலும் வந்ததில்லை. எனது வலையில் கொஞ்சம் போல இட்டதை அழித்துவிட்டேன்.அதை இன்னும் சற்று விரிவாகப் பதிவு செய்துள்ளேன்.
அரவக்கோன்







எனது ஓவியப் பயணம்
அறையை வீடாக்கும் சுவர்களும்
சுவர்களின் மீதேறிய ஓவியங்களும்
வீடுகளும் கோடுகளும்



















அ.நாகராஜன்

(அரவக்கோன்)





கலையம்புத்தூர்

நான் பிறந்த ஊர் பழநிக்கு அருகில் உள்ள கலையம்புத்தூர். (என் பிறந்த தினம் 26-4-1939) என்னும் சிறிய ஊர்.

“கலையம்புத்தூர் அக்கிரஹாரம் கிழக்கு மேற்காக, எதிரெதிரான வீடுகளுடைய இரு வரிசையாக அமைந்திருக்கும். தெருக்களில் லாந்தல் கம்பங்களில் மண்ணெண்ணெயில் எரியும் சிம்னி விளக்குகள் இருக்கும். தெரு மிகவும் குறுகல் என்று சொல்லமுடியாது. வீதிகள் சாணம் தெளித்து, பெருக்கி சுத்தமாக இருக்கும். எங்கும் குப்பையின்றி, வீட்டுக்கு வீடு இடைவெளி இல்லாமல் கோலங்களுடன் ‘பளிச்' என்று இருக்கும். வீட்டுத் தரைகள் காரையால் சமப் படுத்தப்பட்டு, தேய்கல்லால் தேய்த்து, வழவழப்பாகவும் தார்ச்சாலை போன்று கருப்பாகவும் இருக்கும். காரை அரைக்கப்படும்போதே அதனோடு கொட்டாங்கச்சியைக் கருக்கி, அந்தக் கரியைக் கலந்து அரைத்துவிடுவதால் தரை கருப்பாக அமையும். அதில் கோலம் ‘பளிச்' என்று தெரியும். வீடுகளில் விறகு அடுப்புக்கள் களிமண்ணால் செய்யப்பட்டிருக்கும். அதன் மேலும் கரியையும் ஊமத்த இலைகளையும் சேர்த்து அரைத்துக் கொஞ்சம் போல அதில் எண்ணெய் கலந்து அடுப்பின் மேல் தேய்த்துத் தேய்த்துக் கருப்பாக்கியிருப்பார்கள். பச்சையான தென்னை மட்டையில் சுத்தமாகச் சீவிய விளக்குமார்களுக்கு இலேசான மஞ்சள் அபிஷேகம் செய்து பார்ப்பதற்கு தந்த விளக்கமார்கள்போல தோற்றம் வரச்செய்து இருப்பார்கள்.

அக்கிரஹாரத்தில் மொத்தம் நூறு வீடுகளும், சிறிய கடைத்தெருவும், சின்னதாக குடியானவத் தெருவும் இருக்கும். ஊரைச் சுற்றிலும் நெல்விளையும் நஞ்சைபூமி ‘பசேல்' என்று காட்சி தரும். வயல்களுக்கு நடுவில் “பிரியாவிடையார் கோயில்” இருக்கும். கோயில் சிறியதானாலும் மனோரம்யமாயும், தெய்வ சானித்தியம் நிறைந்ததாகவும் இருக்கும். அக்கிரஹாரத்தின் கிழக்கு முடிவில் ‘கல்யாணி அம்மன்' கோயிலும், அதை ஒட்டினாற்போல தென் வடவாக ஓடும் வாய்க்காலும் இருக்கும். ஒரு அழகிய நந்தவனமும் வாய்க்காலுக்கு அந்தப் பக்கத்தில் இருக்கும்.

அனேகமாக அங்கு வசிப்பவர்களெல்லாம் விவசாயிகள். நெல் அறுவடை ஆனதும் ஒவ்வொரு வீட்டின் வீதிகளிலும் திண்ணையை ஒட்டிய இடத்தில் நீண்ட சதுரமாகக் குழி வெட்டுவார்கள். குழிமண் காய்ந்து ஆறியபின் அதன் கீழும், பக்கவாட்டிலும் மூங்கில் பாயை மறைப்புக் கட்டி அதனுள் தங்களுக்கு வருடத்துக்கும் தேவையான நெல்லைக் கொட்டி மேலே பாயை மூடி, வைக்கோல் பரப்பிப் பிறகு குழிகளை ஒரு மேடை போலச் செய்து விடுவார்கள். வெய்யில் காலத்தில் இரவில் அதன் மேல் படுக்கை விரித்து படுத்து உறங்குவார்கள். இரண்டு மாதங்களுக்குப் பிறகு குழியைப் பிரித்து நெல்லைக் களஞ்சிகளில் சேர்த்து வைத்துக் கொள்ளுவார்கள். குழிநெல் ஆரோகியம் தரக்கூடியது என்னும் நம்பிக்கை உடையவர்கள் அவர்கள்.

வீட்டுக்கு வீடு பசு எருமை மாடுகள் கொட்டிலில் கட்டி இருக்கும். பசு மாடு சாணமிட்டவுடன் அதையெடுத்து கல்-மண் கலவாமல், சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, வெய்யிலில் காய வைத்துக் கொள்வார்கள். நன்றாகக் காய்ந்த பிறகு நெல் கருக்காயை மண் தரையில் கெட்டியாகப் பரப்பி அதன் மேல் சாணி உருண்டைகளை அடுக்கி திரும்பவும் கருக்காயைக் கொட்டிக் குவியலாக்கி மூடி, நெருப்பு வைத்து விடுவார்கள். அது நன்றாக எரிந்து தணிந்து ஆறிப்போன பிறகு மெதுவாக அதைக் கலைப்பார்கள். உள்ளே சாணி உருண்டைகள் சாம்பலாகி வெள்ளையாக இருக்கும். அந்தச் சாம்பலைத் துணியால் வஸ்திரகாயம் செய்து (மெல்லிய துணியை வாயகன்ற பாத்திரத்தில் வேடு கட்டிச் சலிப்பது.) கொள்ளுவார்கள். பின்னர் அதில் கலக்க வேண்டிய வாசனைப் பொருள்களைச் சேர்த்து அந்த வீபூதியை மலைக்கு எடுத்துச் சென்று முருகனுக்கு அபிஷேகம் செய்வித்துக் கொண்டு வருவார்கள். அந்த விபூதியை வெளியூர்களில் உள்ள நண்பர், உறவினர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். வீட்டிலும் உபயோகிப்பார்கள். இதேபோல, மலை வாழைப்பழம் நூற்றுக் கணக்கில் வாங்கி வீட்டிலேயே முறைப்படி பஞ்சாமிர்தம் செய்து முருகனுக்கு அதை அபிஷேகம் செய்வித்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி வைப்பார்கள். பழனியின் பிரசித்தமான மலை வடுமாங்காய் ஊறுகாயும், பார்சல் செய்யப்படும்.

கலையம்புத்தூருக்கும், ஷண்முக நதிக்கும் இடையில் சற்று உள்ளடங்கிய வனத்துக்குள் ‘சின்னாறு' என்ற பெயருடைய ஆறு ஒன்று ஓடும். அங்கு பாறைகள் அதிகமாகவும் மணல் தரை குறைவாகவும் இருக்கும். நதி பாறைகளில் துள்ளிக்குதித்து சிறு சிறு அருவிகளாக வருவது பார்க்க மனம் கவர்வதாக இருக்கும். கலையம்புத்தூரின் அக்கிரகார மஹா ஜனங்கள் நினைத்த பொழுதெல்லாம் வீட்டுக்கு ஒரு தின்பண்டமாக, சமையலாக செய்துகொண்டு அங்கு சென்று ‘கூட்டாஞ் சோறு' உண்ண ஆரம்பித்து விடுவார்கள். இதற்கான கூடுதலும் தீர்மானமும், வாய்க்காலில் பெண்கள் துவைத்துக் குளிக்கும் காலை வேளயிலேயே தீர்மானிக்கப்பட்டுவிடும். திரும்பி வந்து, இரவில் கும்மியும் கோலாட்டமும் நிலவில் அமர்களமாக நடக்கும்.”

கலையம்புத்தூர் பற்றிய இந்தச் சுவையான செய்திகள் எனது அத்தையும், மாமியாருமான திருமதி “பூரணி” எழுதியுள்ள “பூரணி நினைவலைகள்” நூலிலிருந்து பெறப் பட்டவை. கலையம்புத்தூருக்கு எனது தாயாருடன் ஓரிருமுறை நான் சென்றிருக்கிறேனே தவிர அவ்வூருடனான தொடர்பு வேறு ஒன்றும் கிடையாது.

ரிஷிவேலி பள்ளி

ராமசாமி (ராமையா), ராமகிருஷ்ணன் (கிட்டு), நாராயணசாமி (ராஜு) என்று எனக்கு மூன்று அண்ணன்கள். கிருஷ்ணவேணி, உமா என்று இரு தங்கைகள். 1942 இல் (மூன்று வயதுக் குழந்தையாக நான் இருந்தபோது) என் தந்தையார் R.அனந்தநாராயண ஐயர் மதனபள்ளி (ஆந்திரப் பிரதேசத்தில் சித்தூர் ஜில்லாவைச் சேர்ந்தது) அருகில் ரிஷிவேலி என்னும் இடத்தில் J.K.என்று உலகெங்கும் அறியப்பட்ட கிருஷ்ணாஜி நிறுவி நடத்திய பள்ளியில் வேலையில் சேர்ந்தார். இதனால் எங்கள் குடும்பம் கலையம் புத்தூரிலிருந்து இடம் பெயர்ந்தது. நாட்புறமும் மலைகள் சூழ்ந்த நிலப் பகுதியில் அப்பள்ளி இருந்தது. சுற்றிலுமிருந்த மலையடிவாரத்தில் சீதாப் பழ மரங்கள் காடாய் அடர்ந்திருக்கும். கேட்பாரற்றுப் பழங்கள் உதிர்ந்து கிடக்கும். கிழக்குப்புறம் மலையில் ஒரு பெரிய குகை உண்டு. சிறுத்தையும், காட்டுப் பன்றியும், கழுதைப் பன்றியும் ஏராளமான நாகப் பாம்புகளும் இன்னும் பல பெயர் தெரியாத உயிரினங்களும் அங்கு இருந்தன. மலையில் ஒரு சிற்றோடையும் உண்டு. அம்மலையில் பல நூற்றாண்டு களுக்கு முன்னர் ஒரு துறவி வாழ்ந்ததால் ‘ரிஷி கொண்டா' (தெலுங்கில் கொண்டா என்பது மலையைக் குறிக்கும்) என்னும் பெயரால் அழைக்கப் படுகிறது. ஆண்டு முழுவதும் மழையும் குளிருமாகவே இருக்கும். ஆசிரியர் குடும்பம் அவர்களுக்கான இல்லங்களில் வசித்தாலும் உண்பது பொது உணவகத்தில்தான். வீட்டில் சமைக்க அனுமதி கிடையாது. மாணவ-மாணவியர் ஆசிரியர் எல்லோரும் பள்ளி வளாகத்தின் உள்ளேயே வசிக்கும் முறை. அங்கு முறையான வகுப்போ ஆண்டு இறுதியில் நிகழும் தேர்வோ இருக்கவில்லை. பாடதிட்டதில் உள்ளவாறு மொழி, கணிதம், என்று படிப் படியாக முடிக்கவேண்டும். இதனால் ஒரு மாணவன் அவனுடைய கற்கும் திறமைக் கேற்ப வகுப்பு மாறிமாறி அமருவான். பள்ளி இறுதி தேர்வு மட்டும்தான் இருக்கும். இந்த கற்பிக்கும் முறைக்கு Dolton Plan என்று பெயர். 1919 இல் Helen Parkhurst என்னும் அமெரிக்கப் பெண்மணி தொடக்கநிலைக் கல்வியில் இந்த புதிய சிந்தனையை உருவாக்கினார். நுண் கலைகளை கற்பிக்க அவற்றில் புகழ் பெற்ற கலைஞர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். மேகம் கவிந்து மோடமாக இருந்தால் மாணவர் விளையாட்டுத் திடலில் ஆசிரியர்களுடன் குழுமி விடுவார்கள். ஒரு முறை மூத்த மாணவர்கள் துணி கொண்டு செய்யப்பட்ட பந்தை கொளுத்தி இரவில் கால்பந்து விளயாடியது இன்றும் பசுமையாக உள்ளது. வகுப்பெடுக்கும் ஆசிரியர்களே மாணவ விடுதியிலும் பொறுப்பாளர்களாக இருப்பார்கள். படிப்பது என்பது வகுப்பறையுடன் முடிந்து விடும். விடுதியில் படிப்பது தடைசெய்யப்பட்ட ஒன்று. ஆண்டு முடிவில் நிகழும் விளையாட்டுப் போட்டிகளில் வெல்வோருக்கு பூச் செண்டுதான் பரிசு. இளம் சிறாருக்கான போட்டிகளில் அனைவருக்கும் பரிசுகள் உண்டு. நானும் தங்கை கிருஷ்ணாவும் ஒரு முறை மலையேறி விட்டு கீழே வரத்தெரியாமல் அழுதவண்ணம் இருந்ததும், எங்களைக் காணோம் என்பது தெரிந்து அனைவரும் பரபரத்துத் தேடியலைந்து கண்டு பிடித்து மீட்டதும் இன்றும் தெளிவாக உள்ள அனுபவம். வளாகத்தில் ஒரு பெரிய கிணறு உண்டு. மாணாக்கர் ஆசிரியர் என்று எல்லோரும் அதில்தான் நீச்சல் பயின்றார்கள். என் அம்மா கூட கொசுவம் வைத்த புடவையுடன் சுரைக்காய் குடுக்கை உதவியுடன் நீச்சல் பயின்றதாக சொல்லி இருக்கிறார்கள். என் மூத்த அண்னன் மூச்சை அடக்கிக் கொண்டு நீரினுள் அமிழ்ந்து விடுவதும் ‘அண்ணன் வர மாட்டான்' என்று என்னை மற்றவர் பயமுறுத்துவதும் என் அச்சம் கண்டு களிப்பதும் நிகழும்.

ஒருமுறை ஒரு ஆசிரியரின் மனைவியை நாகம் தீண்டி அவர் இறந்து போனது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சோகம். இரவில் மாணவியர் விடுதியில் பணியிலிருந்த அவர் தமதறையிலிருந்து எதிர்புறம் சென்றபோது இருட்டில் பாம்பை மிதித்து விட அது கொத்திவிட்டது. மருத்துவ வசதி இல்லாத அங்கிருந்து மதனபள்ளிக்குத்தான் கொண்டு செல்லவேண்டும். காலம் கடந்துவிடவே காப்பாற்ற இயலவில்லை என்று என் அண்ணன் கூறியிருக்கிறார். பாம்பு கடித்து இறந்தது என்பது அதற்கு முன்போ பின்னரோ அங்கு நிகழவில்லை. என் தந்தை அங்கிருந்த சமயம் G.V.சுப்பாராவ் என்பவர் பள்ளியின் முதல்வராக இருந்தார். வைத்தண்ணா தேவானை போன்றோர் ஆசிரியர்கள். GVS என்று குறிப்பிடபட்ட அவர் தமது கல்லூரிப் படிப்பில் இரண்டு எம்.ஏ.பட்டம் பெற்றவர். அப்போதே பிரம்மஞான சங்கத்து உறுப்பினரான மிகவும் ஈடுபாட்டுடன் பெசன்ட் அம்மையாரின் கல்விச் சிந்தனைகளை செயற் படுத்தினார். அடையாரில் தொடங்கிய பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக அம்மையாரால் அமர்த்தப் பட்டார். கிண்டிபள்ளி என்று அறியப்பட்ட அதுதான் ரிஷிவேலிக்கு 1931 இல் இடமாற்றம் செய்யப்பட்டது. 1942 வரை பள்ளியின் தலமை ஆசிரியராக இருந்த அவர்மேல் ஆங்கில அரசு தேச விரோத செயல்களில் மாணவர் களுக்கு வழி காட்டுவதாகச் சொல்லிப் பள்ளியைச் சோதனை செய்து அரசு தடை செய்திருந்த கம்யூனிச சிந்தனை சார்ந்த பல நூல்களைப் பறிமுதல் செய்தது. அவர் தனது வேலையை விட்டு விலகினார். பின்னர் ஐம்பதுகளில் சென்னையில் மாம்பலத்தில் பால பாரத் (Bala barath) பள்ளியை நிறுவினார். ரிஷிவேலியில் அவருடன் பணிபுரிந்த ஆசிரியர் சிலர் இங்கும் இருந்தனர். 1960 களில் பணியிலிருந்து ஓய்வு எடுத்துக் கொண்டு தமது 86ஆவது வயதில் காலமானார். இன்றும் அவரது பிறந்த நாள் அவரருடன் இணைந்தவர்களால் கொண்டாடப்படுகிறது.

No comments: